சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்.. தனுஷை தொடர்ந்து பாலிவுட்டில் எஸ்கே?
சென்னை: தென்னிந்திய சினிமா நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் பாலிவுட்டுக்கு படையெடுத்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனும் இந்தி மார்க்கெட்டை கவரப் போகிறாரா என்கிற கேள்வி திடீரென அவர் சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்தில் தென்பட்ட நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜன நாயகன் மற்றும் ராஜாசாப் உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக வெளியாகிறது.

இயக்குநர் அட்லீ பாலிவுட்டுக்கு சென்று பட்டையை கிளப்பி வரும் நிலையில், சிவகார்த்திகேயனும் இந்தி படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாரா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. முன்னதாக சூர்யாவும் இந்தி படங்களில் நடிக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் மோகம்: பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் மற்றும் மாலிவுட் என அனைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் இணைந்து நடித்தனர். அந்த காலத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இந்தியில் பல படங்களில் அமிதாப் பச்சன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி என ஏகப்பட்ட நடிகைகள் இந்தி படங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான நிலையில், அடுத்த மாதம் கூட அவர் நடிப்பில் ஒரு இந்தி படம் வெளியாகிறது.
இந்தியில் அசத்தும் தனுஷ்: ராஞ்சனா திரைப்படமே தனுஷுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை இந்தியில் கொடுத்தது. ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருந்தார். அக்ஷய் குமார் உடன் இணைந்து அட்ரங்கி ரே படத்தில் நடித்தார். வரும் நவம்பர் மாதம் க்ரித்தி சனோன் உடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மே படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷ் பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டு மீண்டும் தமிழில் இட்லி கடை போன்ற படங்களை இயக்கி நடித்து வருகிறார்.
சஞ்சய் லீலா அலுவலகத்தில் சிவகார்த்திகேயன்: நடிகர் சூர்யா இந்தியில் ஜோதிகாவை போலவே நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. அவரது தயாரிப்பில் அக்ஷய் குமார் நடித்த சூரரைப் போற்று இந்தி ரீமேக்கான சர்ஃபிரா திரைப்படம் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்திற்கு சென்றிருந்த காட்சிகள் வெளியான நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அமரன், பராசக்தி என சிவகார்த்திகேயன் கிராஃப் உயர்ந்து வரும் நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடித்தால் வேறலெவலில் இருக்கும்.


Click it and Unblock the Notifications











