சரித்திரம் படைத்துவிட்டீர்கள் கண்மணிகளே! - நடிகர் சிவகுமார்
என் கண்ணின் மணிகளான மாணவமணிகளே !
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சரித்திரம் படைத்து விட்டீர்கள். பெருமிதத்தில் என் நெஞ்சம் நெகிழ்கிறது.
1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் ஓவியக்கல்லூரியில் சக மாணவர்களோடு நான் உண்ணா விரதமிருந்த அந்தப் பொன்னாளை நினைவுபடுத்தியது உங்கள் அறவழிப் போராட்டம்.

அவசரச் சட்டம் பிறப்பித்து விட்டனர். மத்திய அரசும் நம் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆவனசெய்யும் என்று நம்புவோம்.
இதுவே மிகப்பெரிய வெற்றி. இதுவரை தன்னெழுச்சியாக நடந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அறப்போராட்டம் வன்முறை நோக்கி திசை மாறக்கூடாது. இதுவரை எந்த அரசியல்வாதியின் ஆதரவு இல்லாமல், உச்ச நட்சத்திரங்களின் கடைக்கண் பார்வை இல்லாமல், நீங்கள் பெற்ற சரித்திர வெற்றி இது. அரசுக்கு நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது. அவர்களுக்குக் கால அவகாசம் கொடுத்து, இத்துடன் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடும்படி வேண்டுகிறேன்.
உங்களுக்குத் தெரியும் முதல்வராக காமராஜர் இருந்த காலம் தொட்டு சென்னையில் இருப்பவன் நான். எந்த அரசியல் சார்பும் இன்றுவரை இல்லாதவன். என் வேண்டுகோளையும் ஏற்று போராட்டத்தை இத்துடன் தற்காலிகமாக கைவிட்டு உங்கள் பணியைத்தொடர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
-சிவகுமார்


Click it and Unblock the Notifications











