'இன்விடேஷன்' ஸ்ரீகாந்த்!
தங்களது திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை நடிகர் ஸ்ரீகாந்த் மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்து கட்டாயம் ரிசப்ஷனுக்கு வர வேண்டும் என அன்புக் கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் ஒரு வழியாக சுபமாக முடிந்துள்ளது. இரு தரப்பினரும் சமரசமாகி விட்டனர். வந்தனாவுடன் சேர்ந்து இனிய இல்லறத்தை ஆரம்பித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
கல்யாணத்தால் ஏற்பட்ட திருஷ்டியைப் போக்கும் வகையில், தங்களது திருமண வரவேற்பை பிரமாண்டமாக, பிரமாதமாக செய்ய ஸ்ரீகாந்த், வந்தனா திட்டமிட்டுள்ளனர். அதன்படி இரு வீட்டாரும் இணைந்து வரவேற்புக்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருகின்றனர்.
இவர்களது திருமண வரவேற்பு வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை இருவரும் இணைந்து தங்களது நண்பர்கள், திரையுலகினருக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீகாந்த் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு காவல்துறை அதிகாரிகளை சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழைக் கொடுத்தார்.
கண்டிப்பாக வர வேண்டும் எனவும் அவர்களுக்கு அன்புக் கோரிக்கையும் வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது திருமண வரவேற்பு 7-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதில் பங்கேற்க அழைப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 6-ந்தேதி மாலை நானும், வந்தனாவும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து திருமண வரவேற்பு பற்றி விரிவாக தெரிவிப்போம் என்றார் ஸ்ரீகாந்த்.
சந்தோஷம் ஸ்ரீ!


Click it and Unblock the Notifications











