ஸ்டார் நைட் - கமல், ரஜினி எஸ்கேப்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நட்சத்திர கலை நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததும், கலைஞானி கமல்ஹாசனும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிகிறது.
சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட வளாகம் ஒன்று கட்டப்படவுள்ளது. இங்கு வணிக வளாகம் உள்பட நடிகர் சங்கத்திற்குத் தேவையான அலுவலகங்கள், கலையரங்கம் உள்ளிட்டவையும் கட்டப்படவுள்ளன.இதற்குத் தேவையான நிதியை, சிங்கப்பூர் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி சேகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவின் ராடான் நிறுவனம் வடிவமைத்து வழங்கவுள்ளது.
இந்த கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் முதல் அனைத்து நடிகர், நடிகைகளையும் கலந்து கொள்ளச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சரத்குமாரே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் அழைத்து வருகிறார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் ஆகிய இரு பெரும் தூண்களும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது.
கமல்ஹாசன், தனது தசாவதாரம் படப்பிடிப்பில் படு பிசியாக உள்ளார். படம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல முக்கியமான காட்சிகளை படமாக்கவுள்ளனர். எனவே கமல்ஹாசனால் சிங்கப்பூருக்கு வர முடியாது என்று கூறப்படுகிறது.
அதேபோல தனது மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் உருவாகும் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படத்துக்கான ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். ஹாலந்தில் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. அதையடுத்து தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் ஓய்வு எடுக்கவுள்ளார் ரஜினி.
எனவே ரஜினிகாந்த்தும் சிங்கப்பூர் கலை விழாவில் பங்கேற்கும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அக்டோபர் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் கலை விழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கக் கூடும் எனத் தெரிகிறது.
ரஜினியும், கமலும் வந்ததால்தான் கடந்த முறை விஜயகாந்த் தலைமையில் நடந்த கலை விழா பெரும் சிறப்புப் பெற்றது, பெரும் நிதியும் திரண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











