2.0-ல் அக்ஷய்தான் ஹீரோ... - ரஜினியின் பெருந்தன்மை
2.0 படத்தில் உண்மையான ஹீரோ நான் இல்லை... அக்ஷய் குமார்தான் என்று பெருந்தன்மையாகக் கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மும்பையில் நடந்த 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவில், வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமாரின் நடிப்பு குறித்து ரஜினியிடம் கருத்து கேட்டார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இயக்குநர் கரண் ஜோஹர்.

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "இந்தப் படத்தில் உண்மையில் நான் ஹீரோ இல்லை, அக்ஷய் குமார்தான். அவர் ஏற்றிருக்கும் வேடம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. நானே கூட அதில் நடித்திருப்பேன். ஆனால் ஷங்கர் ஏனோ எனக்கு அதைத் தரவில்லை.
அக்ஷய் மிகக் கடுமையான உழைப்பாளி. பிரமாதமாக நடித்திருக்கிறார். 2.0 வந்த பிறகு இந்தியா முழுவதும் அக்ஷய் குமாருக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.
ஷங்கருடன் பணியாற்றுவது சாதாரண விஷயம் இல்லை. அவர் மிகவும் கச்சிதமாக அமைய வேண்டும் என விரும்புவார். படம் முழுவதும் 3டியில் படமாக்கப்பட்டது வித்தியாசமான அனுபவம்," என்றார்.
2.0 படத்தில் ரஜினிதான் நாயகன். அவருக்கு வில்லனாகத்தான் அக்ஷய் நடித்துள்ளார் என்றாலும், அக்ஷயின் உழைப்பைச் சிறப்பிக்கும் வகையில் பெருந்தன்மையாக அவரை ஹீரோ என ரஜினி குறிப்பிட்டார். அதைப் பாராட்டிய இயக்குநர் கரண் ஜோஹர், 'இந்தப் பெருந்தன்மையும் எளிமையும்தான் ரஜினி சார், தி லெஜன்ட்' என்றார்.


Click it and Unblock the Notifications











