ஹாலிவுட் தரத்தில் இந்தியப் படங்கள்... சாட்சியாக பாகுபலி... சூர்யா புகழாரம்
சென்னை: இந்தியப் படங்கள் தற்போது ஹாலிவுட் தரத்தில் தயாராவதாகவும், அதற்கு பாகுபலி படமே சாட்சி என்றும் நடிகர் சூர்யா பாகுபலி படத்தைப் புகழ்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ள படம் ‘பாகுபலி'. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா போன்றோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது :-

ஆசை நிறைவேறவில்லை...
ராஜமவுலி திறமையான இயக்குனர். அவர் இயக்கிய பாகுபலி படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை.

பெருமை...
தற்போது அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதை பெருமையாக கருதுகிறேன்.

கலைக்கு மொழியில்லை...
கலைக்கு மொழி கிடையாது. தமிழ் படம், தெலுங்கு படம், இந்தி படம் என சினிமாவை பிரித்து பார்க்க கூடாது. எல்லாமே இந்திய படங்கள்தான்.

சாட்சியாக பாகுபலி...
தற்போது நமது இந்திய படங்கள் ஹாலிவுட் தரத்தில் தயாராகின்றன. அதற்கு சாட்சியாக பாகுபலி உள்ளது.

இனி அப்படி இல்லை...
முன்பெல்லாம் ஹாலிவுட்காரர்கள் இந்திய படங்களை சாதாரணமாக பார்ப்பார்கள். இனி அப்படி அவர்கள் பார்க்க முடியாது.

நாம் திறமையானவர்கள்...
ஹாலிவுட் படங்களை கூட பாகுபலி படம் போல் உள்ளது என்று ஒப்பிடும் அளவுக்கு நாம் உயர்ந்துள்ளோம். நம்மிடம் திறமையானவர்கள் நிறைய உள்ளனர்.

நவரசமும்...
ஹாலிவுட் படங்களில் ஒரே உணர்ச்சியைதான் வெளிப்படுத்த முடியும். ஆனால் இந்திய படங்களில் பல தரப்பட்ட உணர்ச்சிகளை காண முடியும்' என இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டுடியோ கிரீன்...
பாகுபலி படத்தை தமிழகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











