மட்ட மல்லாக்கக் கிடக்கும் மார்க்கெட்டை சரி செய்ய திரிவிக்ரமுடன் கை கோர்க்கும் சூர்யா
சென்னை: சரிந்து கிடக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் நோக்கத்தில் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்க்கிறார் நடிகர் சூர்யா. சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த அஞ்சான் மற்றும் மாசு ஆகிய இரண்டு படங்களும் நன்றாகக் கவிழ்த்ததில் தற்போது சூர்யாவின் மார்க்கெட் நன்றாக சரிந்து விட்டது.
தமிழின் முன்னணி நாயகராக வலம்வந்த சூர்யா தற்போது அதிலிருந்து சற்றேக் கீழிறங்கி விட்டார். தவற விட்ட இடத்தைப் பிடித்து தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவராக மீண்டும் வலம்வர விரும்புகிறார் சூர்யா.
இதற்காக முன்னணி இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து கைகோர்த்து இருக்கிறார் சூர்யா, இன்னும் 2 ஆண்டுகளுக்கு சூர்யாவின் கால்ஷீட் நிரம்பி விட்டது. எந்தெந்த இயக்குனர்களுடன் சூர்யா கைகோர்க்கிறார் என்று பார்க்கலாம்.

யாவரும் நலம் விக்ரம் குமார்
தமிழில் வெளிவந்து வெற்றிபெற்ற யாவரும் நலம் திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில், தற்போது 24 என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. தாத்தா, அப்பா, மகன் என்று 3 விதமான தோற்றங்களில் சூர்யா நடித்து இருக்கும் இந்தப் படம் வரும் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.

சிங்கம் 3 – ஹரி
தமிழில் சூர்யாவிற்கு மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்த படம் சிங்கம். இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் சிங்கம் மற்றும் சிங்கம் 2 படங்களில் நடித்த சூர்யா தற்போது 3 வது முறையாக மீண்டும் ஹரியுடன் சிங்கம் 3 படத்தில் இணைகிறார். இந்தப் படத்தில் அனுஷ்கா மற்றும் சுருதிஹாசன் என 2 நாயகிகள் நடிக்கவிருக்கின்றனர்.

சதுரங்க வேட்டை வினோத்
2014 ம் ஆண்டு வெளிவந்து தமிழில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் சதுரங்க வேட்டை. சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் தற்போது அதன் 2 ம் பாகத்தை எடுக்கவிருக்கிறார், சதுரங்க வேட்டை படத்தின் 2ம் பாகத்தில் சூர்யாவை இயக்குகிறார் வினோத்.

அட்டக்கத்தி ரஞ்சித்
ரஜினியை வைத்துப் படமெடுக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டாலும் அட்டக்கத்தி ரஞ்சித் என்றே அனைவராலும் அறியப்படுகிறார் ரஞ்சித். தற்போது ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கும் ரஞ்சித், அந்தப் படம் முடிந்தவுடன் தனது அடுத்த படத்தில் சூர்யாவுடன் இணைகிறார். சூர்யாவின் தம்பி கார்த்தியின் மார்க்கெட்டை உயர்த்திய ரஞ்சித், தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

அக்கடச்சீமை இயக்குனருடன்
இந்த 4 இயக்குனர்களின் படங்களில் நடித்து முடித்தவுடன் தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரமுடன் கைகோர்க்க விருக்கிறார் சூர்யா. தெலுங்கில் அதடு, ஜல்சா மற்றும் சன் ஆப் சத்தியமூர்த்தி போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த திரிவிக்ரம் தற்போது சூர்யா படத்தை இயக்குவதன் தமிழில் அறிமுகமாகிறார்.


Click it and Unblock the Notifications











