அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் பற்றி அப்டேட் கொடுத்த சூர்யா... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
சென்னை : சூர்யா நடிக்கும் படங்கள் வரிசையாக அடுத்தடுத்து பெரிய அளவில் வெற்றி பெற்று, பாராட்டுக்களை குவித்து வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு சூரரைப் போற்று வெளியான நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜெய் பீம் வெளியாகி உள்ளது.
இந்த இரு படங்களும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் பேனரில் தயாரிக்கப்பட்டன. மிகப் பெரிய ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

வரவேற்பை பெற்ற படங்கள்
உலகம் முழுவதும் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பிலும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் ஜெய் பீம் படத்தை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருந்தனர்.

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்
சூரரைப் போற்று, ஜெய்பீம் என வரிசையாக சூர்யா நடிக்கும் படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் அடுத்ததாக சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்களும் ஓடிடி தளத்திலேயே வெளியாகலாம் எனவும், படங்களை ஓடிடி.,யில் ரிலீஸ் செய்வதிலேயே சூர்யா கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்டது.

அமேசானுடன் ஒப்பந்தம்
கடைசியாக 2019 ல் சூர்யா நடித்த காப்பான் படம் தான் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. அதற்கு பிறகு சூர்யா நடித்துள்ள 2 படங்களும் ஓடிடி.,யிலேயே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. அவரின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் படங்களும் ஓடிடி தளத்திலேயே வெளியிடப்பட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்பேட் தந்த சூர்யா
இந்நிலையில் தனது அடுத்த படங்களின் ரிலீஸ் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில், தான் தற்போது நடித்து வரும் டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய படங்கள் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யா படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக போகும் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
இந்த படங்கள் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என சூர்யாவே கூறி விட்டார். இதனால் இந்த படங்களின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் இப்போதே கேட்க துவங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











