பாகுபலி 2 வில் சூர்யா?
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமௌலியின் சரித்திரப் படமான பாகுபலி 2 வில், நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
உலகளவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் பாகுபலி 2 படத்திற்கும் ஒரு இடமுண்டு. பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்பை விரைவில் படக்குழுவினர் தொடங்கவிருக்கின்றனர்.

பாகுபலி முதல் பாகத்தை விட இந்தப் பாகத்தில் ஆக்க்ஷனும், செண்டிமெண்டும் அதிகம் இருக்கும் என்று ஏற்கனவே நடிகர் ராணா தெரிவித்து இருக்கிறார்.
பாகுபலியை விட பாகுபலி 2 படத்தில் பிரமாண்டம் அதிகம் இருக்கும் என்று ராணாவின் கருத்தை இயக்குநர் ராஜமௌலியும் அங்கீகரித்துள்ளார்.
இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஏற்கனவே உங்களது படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று சூர்யா முன்னதாக ஒரு விழாவில் ராஜமௌலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
சூர்யாவின் கோரிக்கை குறித்து அப்போது எதுவும் சொல்லாத ராஜமௌலி இந்தப் பாகத்தில் அவரின் ஆசையை நிறைவேற்றப் போகிறார் என்று கூறுகின்றனர்.
2 வது பாகத்தில் பிரமாண்டம் கருதி நிறைய ஹிந்தி மற்றும் தமிழ் நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்ட ராஜமௌலி, இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஒரு சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை வழங்கி இருக்கிறாராம்.
இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என்று டோலிவுட்டிலிருந்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்திருக்கும் சூர்யா பாகுபலி 2 வில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது எதனால் என்று கேட்டால், இந்தப் படத்தின் நடிப்பதன் மூலம் உலகளவில் அங்கீகாரம் பெறலாம் என்ற ஆசையினால் தானாம்.
சூர்யா தற்போது விக்ரம் குமாரின் 24 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்தப் படம் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications