என்னைப் பற்றிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம்- சூர்யா
சென்னை: என்னைப் பற்றிய தவறான தகவல்களை நம்ப வேடம் என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 24 படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.
மலேசியாவில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள, சூர்யா லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இதனால் பலரும் சூர்யாவை விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு சூர்யா தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சூர்யா
சூர்யா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ''மலேசியா தமிழ்ப் பத்திரிகையில் எனக்கே தெரியாத என்னைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ‘மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா' என்ற மதம் சார்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் நான் கலந்துகொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இச்செய்தி பலரால் பகிரப்படுகிறது.

மதம் தொடர்பான
இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய தகவல்கூட எனக்குத் தெரியாது கலந்துகொள்ளும்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. கலைஞர்கள் சாதி, மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள். கலைத்துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பாக நடக்கிற ஒரு நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள சம்மதித்து இருக்க மாட்டேன்.

பணம் வாங்கியதில்லை
சமூக வளர்ச்சி மாற்றம் , விழிப்பு உணர்வு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வமாக கலந்துகொள்கிற நான், அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக்கொண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது என்கிற கொள்கை உடையவன் நான். அப்படி இருக்க, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை.

சட்டப்பூர்வமான
மலேசியாவில் நடைபெறுவதாகச் சொல்லப்படும் 'மகா இந்து இளைஞர் ஒற்றுமை' விழாவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விழா அமைப்பினர் என் பெயரை தவறாகப் பயன்படுத்தினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

வருத்தமளிக்கிறது
இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வருவது வருத்தமளிக்கிறது. என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் என் வேண்டுகோள், இனி இதுபோன்ற தவறான நோக்கத்தோடு இடம்பெறும் செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளித்து, தொடர்ந்து எனக்குத் துணை நிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











