சூர்யாவுக்கு ஆந்திராவில் சிக்கல்!

தமிழில் சூப்பர் ஹிட் ஆகும் படங்களை டப் செய்து தெலுங்கிலும் வெளியிடுவது கோலிவுட் வழக்கம். தமிழைப் போலவே ஆந்திராவிலும் தமிழ் டப்பிங் படங்கள் சக்சஸ் ஆகி வசூலை வாரிக் குவித்து வருகின்றன.
எனவேதான், சூர்யா, விஷால், விக்ரம், ஜெயம் ரவி ஆகியோரின் படங்கள் ரெகுரலாக ஆந்திராவிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகின்றன. அதிலும் விஷால், ஜெயம் ரவி (இருவருக்கும் மதர் டங் தெலுங்கு) இருவரும் தெலுங்கு ரசிகர்களுக்கேற்றவாறு காட்சிகள் அமைவது போல பார்த்துக் கொள்கின்றனர்.
இவர்களுக்கெல்லாம் உச்சமாக, ரஜினி நடிக்கும் தமிழ்ப் படங்களுக்கு தமிழில் கிடைப்பது போலவே தெலுங்கிலும் பிரமாதமான மார்க்கெட் உண்டு. சில நேரங்களில் தமிழை விட அதிக அளவிலான வரவேற்பும், வசூலும் கிடைப்பது உண்டு.
கஜினிக்குப் பிறகு சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில், தீபாவளிக்கு சூர்யா நடித்து வெளியான வேல், தெலுங்கில் தேவா என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது.
பாடல்கள், வசனக் காட்சிகளின் டப்பிங் முடிந்து விட்டன. ஆனால் தியேட்டர் கிடைக்காததால், படத்தை ரிலீஸ் செய்யும் பணி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. உண்மையில் தியேட்டர் உரிமையாளர்கள் இந்தப் படத்தை திரையிட விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் தேவே ரிலீஸாகக் கூடாது என்று தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மறைமுக எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம்.
தமிழ் டப்பிங் படங்கள் தெலுங்கில் ரிலீஸாகி வசூலை வாரிக் குவிப்பது அவர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் ஒரிஜினல் தெலுங்குப் படங்களின் வெற்றியும், வசூலும் பாதிக்கப்படுவதாக அவர்கள் குறை கூறுகிறார்கள்.
சமீபத்தில் ஆந்திராவில் பல தெலுங்குப் படங்கள் ரிலீஸாகின. ஆனால் ஹேப்பி டேஸ் என்ற படத்தைத் தவிர மற்றவை ஊற்றிக் கொண்டு விட்டன. மேலும் இளம் நடிகர் மகேஷ்பாபுவின் அதிதி படமும் தோல்வி அடைந்து விட்டது.
இந்த நிலையில் வேல் தெலுங்கில் வெற்றி பெற்றால் பெரிய கெளரவப் பிரச்சினையாகி விடும் என்றுதான் அப்படத்தை திரையிட விடாமல் தடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ...!


Click it and Unblock the Notifications











