'சிங்க'த்தின் தங்க மனசுக்கு ஒரு சல்யூட்!
கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக ஏழைகளுக்கு உதவிகள் செய்வதில் சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினரின் கரிசனம் நாடறிந்தது.
நேற்று ஒரு சாலை விபத்தில் சிக்கிய ஆந்திர தம்பதிகளுக்கு சூர்யா செய்த உதவி மகத்தானது.

தனது எஸ் 3 படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு, சித்தூருக்கு வந்து கொண்டிருந்தார் சூர்யா. அப்போது வழியில் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்துக்குள்ளான கணவன்- மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்தததைப் பார்த்துப் பதறிய சூர்யா தனது காரை நிறுத்தச் சொல்லி இறங்கி ஓடிப் போய்ப் பார்த்தார்.
ஆம்புலன்சுக்குக் காத்திராமல் தனது உதவியாளர் மற்றும் டிரைவர் உதவியுடன் அந்த கணவன், மனைவியை தூக்கிப்போய் தனது காரில் ஏற்றினார். அவர்களை சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி செய்தனர். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருப்பதைத் தெரிவித்து திருப்பதிக்கு அனுப்பச் சொல்லிவிட்டார்கள்.
உடனே நகரியில் வசிக்கும் நடிகை ரோஜாவை செல்போனில் தொடர்பு கொண்ட சூர்யா, விஷயத்தைச் சொல்லி திருப்பதி மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.
பின்னர் சூர்யா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கணவன்-மனைவியை திருப்பதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இவை அனைத்தும் முடிய கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அவ்வளவு நேரமும் பொறுமையாக மருத்துவமனையில் இருந்து அவர்களை அனுப்பிய பிறகே தனது அறைக்குத் திரும்பினார் சூர்யா.


Click it and Unblock the Notifications











