அஞ்சான் படம் மூலம் பாடகர் அவதாரமெடுத்த சூர்யா!
சென்னை: அஞ்சான் படம் மூலம் பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளார் நடிகர் சூர்யா.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துள்ள படம் அஞ்சான். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது. அதற்கு பதில் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இன்று சென்னை சத்யம் அரங்கில் திரையிடப்பட்டது.
இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன், சூரி, வித்யூத் ஜம்வால் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் பார்த்திபன், சசி, தயாரிப்பாளர்கள் கேயார், அபிராமி ராமநாதன், ஞானவேல்ராஜா, மதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நான்கு கதைகள்
விழாவில் சூர்யா பேசுகையில், "சிங்கம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல கதையுள்ள படத்தில் நடிக்கணும்னு நினைச்சேன். அப்பொழுதுதான் லிங்குசாமி என்னிடம் நான்கு கதைகளை தயார் செய்துவந்து சொன்னார்.

அஞ்சான்
அவற்றில் நான்காவது கதை எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அதுதான் அஞ்சானாக உருவாகியிருக்கிறது. இன்னொரு கதையும் எனக்கு பிடித்திருந்தது. அதில்தான் இப்போது கார்த்தி நடிக்கிறார். எண்ணி ஏழாவது நாள் என்ற தலைப்பில் அது உருவாகிறது.

ஏக் தோ தீன்
இந்த படத்தில்அஞ்சானில் ‘ஏக்தோ தீன்' என தொடங்கும் பாடலை எனது சொந்த குரலில் பாடி இருக்கிறேன். இந்த பாடல் டிராக்கை யுவன் பாடி பதிவு செய்து வைத்திருந்தார். பாட்டை நான் கேட்டுவிட்டு, நல்ல பாடகரை இந்த பாடலுக்கு பாட வைக்க வேண்டும் என்று லிங்குசாமியிடம் தெரிவித்தேன். திடீரென யுவன் சங்கர் ராஜாவும் லிங்குசாமியும் நீங்களே பாடுங்கள் என கூறி விட்டனர்.

தயக்கம் - மகிழ்ச்சி
முதலில் பாட ரொம்பவும் தயக்கமாக இருந்தது. ஸ்டூடியோவுக்கு அழைத்து என் குரலில் அந்த பாடலை பதிவு செய்தனர். இரண்டு மணி நேரத்தில் முடித்து விட்டு என்னை போகச் சொன்னார்கள். நான் சரியாக பாடவில்லை என்று அனுப்பி விட்டார்கள் என நினைத்தேன். பிறகு பாடல் நன்றாக வந்துள்ளது என்று என்னை பாராட்டினார்கள். முதல் தடவையாக நான் பாடிய பாடல் திரையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிறந்த நாள்
எனக்கு நாளை பிறந்த நாள் ஆகும். இன்று இந்த விழா எனது பிறந்தநாள் மாதிரியே நடப்பதாக உணர்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. எனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்கள் பெரிய பேனர்கள் வைத்து கொண்டாட வேண்டாம்.

உதவி செய்யுங்கள்
நலிவடைந்தவர்களுக்கு உதவி செய்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன். என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நிறைய ரசிகர்கள் ரத்ததானம் செய்திருக்கிறார்கள். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











