வருகிறார் எஸ்விசேகர் மகன்!
வாரிசு நடிகர்கள் வரிசையில் ஒரு கலக்கல் நாயகனாக அறிமுகமாகிறார் எஸ்.வி.சேகரின் மகன் அஷ்வின் சேகர்.
அப்பாக்கள் நடித்து (கடித்து!) ஓய்ந்த பின்னர் அந்த சேவையை மகன்களோ அல்லது மகள்களோ அல்லது ஒன்று விட்ட, விடாத சகோதரர்களோ அல்லது உறவினர்களோ தொடருவது கோலிவுட்டில் எழுதப்படாத விதியாக மாறிப் போய் விட்டது.அப்பா நடிகர் அல்லது இயக்குநர் அல்லது இசையமைப்பாளர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது வாரிசுகள் ரசிகர்களை வதைத்து வருவது ரொம்ப காலமாக தொடர்ந்து வருகிறது.
அந்த வரிசையில் புதிதாக இணைகிறார் எஸ்.வி. சேகரின் மகன் அஷ்வின் சேகர். சின்ன வயதில் அப்பாவை விட இரண்டு மடங்கு உப்பலாக இருந்த அஷ்வின் சேகர், இப்போது தெளிவான மீசை, கொஞ்சம் போல தாடியுடன் அழகாக இருக்கிறார்.
ஆக்ஷன் ஹீரோவாக தனது மகனை அறிமுகப்படுத்துகிறாராம் சேகர். படத்திற்கு வேகம் என பெயர் வைத்துள்ளனர். கதையை எஸ்.வி.சேகரே எழுத, திரைக்கதை, வசனத்தை கோபிநாத் பார்த்துக் கொள்கிறார். உதயசங்கர் படத்தை இயக்கவுள்ளார்.
சென்னையிலும், மலேசியாவிலுமாக படத்தை எடுக்கப் போகிறார்களாம். அஷ்வின் சேகருக்கு ஜோடியாக அர்ச்சனா என்ற வேதா நடிக்கிறார். ஏற்கனவே தமிழில் இரண்டு படங்களில் தலை, உடல் காட்டியவர் தான் இவர்.
முக்கியமான விஷயம், குஷ்புவும், பிரபுவும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்களாம். இணைந்து நடிக்கிறார்களா அல்லது தனித் தனியாக நடிக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஒரு காலத்தில் படு நெருக்கமாக இருந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஜோடி வெகுகாலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் நடிக்கவிருப்பது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிப்புக்காகவே பல சிறப்பு விஷயங்களைக் கற்று வைத்துள்ளாராம் அஷ்வின் (கரையேறியாகனுமே!). சண்டை, டான்ஸ் போன்ற அத்தியாவசிய விஷயங்களைக் கற்றுள்ளாராம். அத்தோடு, கூத்துப் பட்டறையிலும் தனது நடிப்பாற்றலை பட்டை தீட்டி வைத்துள்ளாராம்.
விஷூவல் கம்யூனிகேஷன் முடித்துள்ள அஷ்வின், அப்பா முன்பு அடிக்கடி நடித்துக் காண்பித்து அசத்துகிறாராம். என்னமா நடிக்கிறான் என் பிள்ளை என்று சேகரும், தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறாராம்.
அப்பா மாதிரி கடிக்காம இருந்தா சரிதான்..


Click it and Unblock the Notifications











