வரலாற்றுப் படத்தில் நடிக்கவே ஆசை 'மனந்திறந்த' ஜெயம் ரவி
சென்னை: வரலாற்றுப் படத்தில் இதுவரை நடிக்கவில்லை எனினும் அந்த மாதிரியான படங்களில் நடிக்கவே ஆசை என்று கூறியிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
பாகுபலி, பாஜிரோ மஸ்தானி ஆகிய படங்களின் வெற்றியால் திரையுலகினரின் கவனம் தற்போது சரித்திரப் படங்களின் மேல் திரும்பியிருக்கிறது.
தமிழில் ஜனநாதன், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் சரித்திரப் படங்களை இயக்கவிருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.மேலும் நடிகர்களின் கவனமும் தற்போது வரலாற்றுப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்நிலையில் நேற்று தனது ரசிகர்களுடன் உரையாடிய ஜெயம் ரவி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சுப்பிரமணியம் சங்கர் என்ற ரசிகர் நீங்கள் நடிக்க ஆசைப்பட்டு இதுவரை முடியாமல் போன கதாபாத்திரம்/படம் எது? என்று கேட்டிருந்தார்.
இதற்கு ஒரே வரியில் வரலாற்றுப் படம் என்று ஜெயம் ரவி பதில் கூறியிருக்கிறார்.இதன் மூலம் வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஜெயம் ரவியின் ஆசை தற்போது வெளிப்பட்டிருக்கிறது.
இதே போல மற்றொரு ரசிகர் பேராண்மை, தனி ஒருவன் 2 படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படமெது? என்று கேட்டிருந்தார்.
இதற்கு வலது கண், இடது கண் ரெண்டுமே நமக்கு ரொம்ப முக்கியம் அதே போல இந்த ரெண்டு படங்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று பதிலளித்து இருக்கிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி உலகெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











