ஆவிகுமார் என் கேரியரை மாற்றும்! - நம்பிக்கையில் உதயா
திருநெல்வேலி படத்தில் நடிகராக உதயா அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன் என்றாலும், சொந்த முயற்சியில் ஷக்கலக்க பேபி, ராரா என சில படங்களில் நடித்தார்.
இப்போது இவரது நடிப்பில் ‘ஆவிகுமார்' என்ற படம் வரவிருக்கிறது. இதில் உதயாவிற்கு ஜோடியாக கனிகா திவாரி நடித்துள்ளார்.
இவருடன் நாசர், ஜெகன், மனோபாலா, பாவா லட்சுமணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். நாளை மறுநாள் வெளியாகும் இந்தப் படம் குறித்து உதயா கூறுகையில், "இந்த 15 ஆண்டுகளில் 9 படங்களில் நடித்துவிட்டேன். பெரும் போராட்டமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

10வது படம்
இந்த ‘ஆவிகுமார்' ஒரு ஜாலி படம். என்னுடைய 10வது படமாக வெளியாகிறது. நான் நடித்த படங்களிலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.

170 அரங்குகள்
இப்படம் 170 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. என் வாழ்க்கையில் இத்தனை அரங்குகளில் என் படம் இப்போதுதான் முதல் முறையாக வெளியாகிறது.

குடும்பத்தோடு பார்க்கலாம்
இப்படம் எல்லாரையும் பயமுறுத்தக்கூடிய படமாக இருக்காது. எல்லாரும் மகிழ்ச்சியாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இருக்கும். பிரம்மாண்டமாக தயாரித்து இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் நாராயணன், எஸ்.சிவசரவணன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இமேஜ் மாறும்
நான் சினிமாவில் நுழையும்போது நிறைய பேர் வந்தாங்க. அதில் பல பேர் காணாமல் போயிட்டாங்க. 15 வருடமாக சினிமாவில் நான் இருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ‘ஆவிகுமார்' வெளியான பிறகு என்னுடைய இமேஜ் மாறும்.

விஜய் ஆன்டனி - ஸ்ரீகாந்த் தேவா
‘ஆவிகுமார்' படத்திற்கு விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா இருவரும் இசையமைத்திருக்கிறார்கள். நான் ஹீரோவாக மட்டும் நடிக்க மாட்டேன். பெரிய நடிகர்கள் படத்தில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடிப்பேன். வில்லன் வேடம் கூட ஓகேதான்.

ஆண்டுக்கு இரு படங்கள்
இனிமேல் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளேன். நல்ல கதைகளை கேட்டு வருகிறேன். ‘காக்கா முட்டை' போன்ற நல்ல கதைகள் கொண்ட படங்களையும் தயாரிக்க இருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











