திடீர் மூச்சு திணறல்.. பழம்பெரும் நடிகர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. ஐசியூவில் தீவிர சிகிச்சை!
மும்பை: திடீர் மூச்சு திணறல் காரணமாக நடிகர் திலீப்குமார் மீண்டும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் தேவதாஸ், கங்கா ஜமுனா, அண்தாஸ், ஆன், ராம் அவுர் ஷியாம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். 98 வயதான இவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.

ஹிந்துஜா மருத்துவமனையில்
இந்நிலையில், நேற்று திடீரென நடிகர் திலீப்குமாருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருகில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் திலீப்குமார்.

குடும்ப நண்பர்
ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வால் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாக நெருங்கிய குடும்ப நண்பரான ஃபைஸல் ஃபருக்கி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு
முதுமை காரணமாக திலீப் குமாருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சுவாசப் பிரச்சினை காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

மீண்டும் மூச்சு திணறல்
இந்நிலையில், மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசி படம்
பாலிவுட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ள திலீப் குமார் கடைசியாக 1998ஆம் ஆண்டு குயிலா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார் திலீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











