வித்தகன் விஜயகாந்த்!
விஜயகாந்த்தின் 150வது படமான வித்தகன் படத்தின் பூஜை வருகிற 14ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடக்கிறது.
விஜயகாந்த் நடித்த 149வது படம் சபரி. மறக்க முடியாத அளவுக்கு பெரும் தோல்வியைக் கண்ட படம் இது. இதையடுத்து தனது 150வது படத்தை பிராண்டமாகவும், சூப்பர் ஹிட் படமாகாவும் கொடுக்கத் திட்டமிட்டார் கேப்டன்.இதையடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த மாதேஷை அழைத்து தனது 150வது படத்தை இயக்கக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கேப்டனுக்காக அட்டகாசமான கதையை ரெடி செய்து விஜயகாந்த்திடம் மாதேஷ் கூறினார்.
கதை பிடித்துப் போகவே அந்தக் கதையையே ஓ.கே. செய்தார் விஜயகாந்த். இதையடுத்து படத்துக்கு எம்.ஜி.ஆர். என்று பெயரிடப்பட்டது. பின்னர் புரட்சித் தலைவன் என்று மாற்றி இப்போது பெயரை வித்தகன் என்று மாற்றி விட்டனர். தேவையில்லாமல் சர்ச்சையை விலை கொடுத்து வாங்குவானேன் என்றுதான் இந்த பெயர் மாற்றமாம்.
வித்தகன் படத்தின் பூஜை வருகிற 14ம் தேதி போடப்படுகிறது. அன்றே படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தைத் தயாரிப்பது விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் விஜயகாந்த் டைப் வசனங்கள், புருவ முறுக்கல்கள், உதடு நெளிப்புகள், புஜபல பராக்கிரம சண்டைகள் என சகலமும் நீக்கமற நிறைந்திருக்குமாம்.


Click it and Unblock the Notifications











