சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்... அன்பான கேப்டனுக்கு வயது 66!
விஜயகாந்துக்கு இன்று 66வது பிறந்தநாள்
சென்னை: நடிகர் விஜயகாந்த் இன்று 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க... என்று பேசியதன் மூலம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிக முக்கிய நபராக மாறிப்போன விஜயகாந்த், உண்மையில் பல தடைகளை தூக்கியடித்து துவம்சம் செய்து சாதனைகள் புரிந்தவர்.
அலட்டல் இல்லாமல், எப்போதும் உண்மை முகத்தை காட்டும் நேர்மையான மனிதர். தமிழ்ப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதை செய்தும் காட்டியவர்.

இனிக்கும் இளமை
இயக்குனர் காஜா இயக்கத்தில் 1978 ஆண்டு வெளிவந்த இனிக்கும் இளமை திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகர் விஜயகாந்த். சிறூவயதிலிருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்ததால் மதுரையிலிருந்து சென்னைக்கு மையம் கொண்டார். பிறகு ஓம் சக்தி, தூரத்து இடிமுழக்கம் போன்ற படங்களில் நடித்தார்.

அங்கீகாரம்
சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், 1981 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு ரஜினிகாந்துடன் போட்டி போடும் நடிகராக மாறினார் விஜயகாந்த். அதற்கு ஏற்றார்போல் பெயரிலும் காந்த் ஒட்டிக்கொண்டதால், ரஜினிகாந்துக்கு போட்டியாக விஜயகாந்த் என பேசப்பட்டது. விஜயராஜ் என்ற இயற்பெயரை விஜயகாந்தாக மாற்றியவர் இயக்குனர் காஜா. கமல் ரஜினி என்ற மிகப்பெரிய சக்திகள் சினிமாவில் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது 1984 ஆம் ஆண்டு மட்டும் 18 படங்களில் நடித்து சாதித்தார்.

வெற்றி நாயகன்
அதன்பிறகு அதிரடி நாயகனாக புகழ்பெற ஆரம்பித்தார். மனக்கணக்கு, சிவப்பு மாலை, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், ஆட்டோ ராஜா, சாட்சி, துரை கல்யாணம், நூறாவது நாள், ஊமை விழிகள், ஆட்டோ ராஜா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன. வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, புலன் விசாரணை போன்ற திரைப்பட்ங்களில் ஏற்ற கதாப்பாத்திரங்கள் வெகுவாக பாராட்டப்பட்டன.

அடைமொழி
முதல் படம் நடிக்கும்போதே தனக்குத் தானே அடைமொழியிட்டுக்கொள்ளும் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் கேப்டன் என அழைக்கப்பட்டது அவருடைய நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்கு பிறகே. பெரிய நடிகர்களின் நூறாவது படம் தோல்வியடையும் என்ற கூற்றை பொய்யாக்கி மாபெரும் வெற்றிப்படமாக்கி காட்டினார் விஜயகாந்த்.

கதாப்பாத்திரம்
காவல் துறையில் சாதித்து நாட்டுக்கு சேவையாற்ற நினைக்கும் ஒவ்வொரு இளைனும், விஜயகாந்தின் ஒரு படத்தை எடுத்துக்கொள்ளலாம் என சொல்லுமளவிற்கு அதிகமாக காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஊமை விழிகள், வல்லரசு, வாஞ்சிநாதன், ஹானஸ்ட் ராஹ், சத்ரியன், சிவந்த கண்கள், சாட்சி என பல திரைப்படங்கள் போலீஸ் என்றாலே விஜயகாந்த் நினைவுக்கு வருமளவுக்கு புகழ்பெற்றன.

தோள்கொடுக்கும் தோழன்
தன்னை சார்ந்திருப்பவர்களை அன்போடு அரவணைத்துச் செல்லும் அற்புத குணம் படைத்தவர் விஜயகாந்த். சரத்குமார், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், அருண்பாண்டியன் போன்ற நடிகர்களின் திரைப்பயணத்திற்கு விளக்கேற்றியவர் விஜயகாந்த். நடிகர் விஜய்யின் அறிமுகப்படமான நாளைய தீர்ப்பு தோல்வியடைந்தது. அப்போது மிகப்பெரிய ஹீரோவாக இருந்த விஜயகாந்த், செந்தூர பாண்டி என்ற படத்தில் நடித்து விஜய்யின் வெற்றிக்கு உதவ முயன்றார்.

குடும்பப் படங்கள்
போலிஸ் அதிகாரி, பாகிஸ்தான் தீவிரவாதியை பிடிப்பது என பல படங்களில் நடித்த விஜயகாந்த் குடும்பப் பாங்கான படங்களைக் கொடுக்கவும் தவறவில்லை. வானத்தைப்போலே, சின்னக்கவுண்டர், தவசி, சொக்கத்தங்கம், எங்கள் அண்ணா, போன்ற படங்கள் இன்றளவும் மிகச்சிறந்த குடும்ப சித்திரங்களாக இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் இந்த நாட்டின் இளைஞர் சக்தி எப்படிப்பட்டது என ரமணா திரைப்படத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞர்களை திரட்டியதன் மூலம் நிரூபித்தார்.

மிகச்சிறந்த பண்பாளர்
நடிகர், அரசியல் கட்சி தலைவர், இவற்றையெல்லாம் தாண்டி மிகச்சிறந்த பண்பாளர், நல்ல மனிதர் விஜயகாந்த் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. வாருங்கள் வாழ்த்துவோம்...!


Click it and Unblock the Notifications











