இதோ.. நடிக்க ஆரம்பிச்சிட்டோம்ல... சீக்கிரமே கட்டடத்தை முடிப்போம்! - விஷால்
நடிகர் சங்கக் கட்டடத்துக்காக நானும் கார்த்தியும் இணைந்து படம் நடித்து ரூ 10 கோடி தருவோம் என்று அறிவித்திருந்த விஷால், அதை செயலில் காட்டவும் இறங்கிவிட்டார்.
அதன் முதல் முயற்சியாக பிரபு தேவா இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தில் விஷாலும் கார்த்தியும் இணைந்து நடிக்கின்றனர்.
பிரபு தேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் கதையை மறைந்த இயக்குநர் கே.சுபாஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறைக்கும் அன்புக்கும் இடையில் நடக்கும் போராட்டமே படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.

ரூ 10 கோடி
சமீபத்தில் நடந்த நடிகர் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது , கட்டிட நிதிக்காக நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் விஷால் இணைந்து 10 கோடி ரூபாய் தருவதாக கூறியிருந்தனர். அதற்கான முதல் முயற்சியாகவே இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு தேவா
பிரபுதேவா பேசும்போது, "இது இரண்டு ஹீரோக்கள் கதை. விஷாலும், கார்த்தியும் ஒப்புக்கொண்டதால்தான் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் தொடங்குகிறது," என்றார்.

விஷால்
விஷால், "நானும் கார்த்தியும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு பணம் கொடுக்க முடிவு செய்தோம். இந்த படத்தில் இருந்து அதற்கான பணத்தைச் சேர்க்க போகிறோம். ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா' தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்," என்று கூறினார்.

கார்த்தி
கார்த்தி கூறும் போது, "இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பது எவ்வளவு பெரிய குழப்பம் என்பது எல்லோருக்கும் தெரியும். நெருக்கமான நண்பர்களாக இருந்தால்தான் இது நடக்கும். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் முன்பு நானும் விஷாலும் பேசிக் கொண்டது கூட இல்லை. அதன் பிறகு நிறைய பேசி இருக்கிறோம். விஷால், சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று 24 மணி நேரமும் உழைக்கிறார். இது இரண்டு நண்பர்கள் கதை. விஷாலுடன் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கும். எங்களிடையே எப்போதும் நட்பு இருக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications











