அரசுடன் கத்தியால் சண்டை போடமாட்டேன்... புத்தியால் சண்டை போடுவேன்! - விஷால்
Recommended Video

சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்ய வைக்க தமிழக அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று நடிகர் விஷால் கூறினார்.
வைகோ தயாரிக்கும் சரித்திரப் படமான வேலு நாச்சியார் தொடக்க விழாவில் விஷால் பேசுகையில், "என்னை வேலு நாச்சியார் மேடை நாடகத்தைப் பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார் அய்யா வைகோ. எனக்கு அரசோடு முக்கியமான சந்திப்பு இருந்தது. சில விஷயத்தை சில நேரத்தில் தவிர்க்க வேண்டியிருக்கும்.

முதலில் இந்த நாடகத்தை இயக்கிய இயக்குநருக்கும், இந்த நாடகத்தில் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில், பெரிய மருது, சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நடித்த நடிப்பு, தங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் பாராட்டுக்கள்.
இங்கே நமது திரைத்துறையை சேர்ந்த பலரும் இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசருக்கு வரிகட்டுவதை எதிர்த்து வேலு நாச்சியார் போராடினார். தமிழ் அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும்.
ஒரு பாதுகாப்பான பாதை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்த வேலு நாச்சியார் என்ற கதாபாத்திரத்துக்கும், என்னை ஊக்குவித்த வேலு நாச்சியார் கதாபாத்திரத்துக்கும் நன்றி. அதே போல் நான் கத்தியால் சண்டை போடப் போவதில்லை, புத்தியால்தான் சண்டை போடப் போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எனக்கு வேலு நாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது 'ஸ்ட்ரெஸ்பஸ்டராக' (மன அழுத்தத்தைக் குறைப்பதாக) இருந்தது," என்றார்.


Click it and Unblock the Notifications











