பீப் பிரச்சினையில் சிம்புவுக்கு நடிகர் சங்கம் உதவவில்லையா? யார் சொன்னது?- விஷால்
பீப் பிரச்சினையில் நடிகர் சங்கம் எனக்கு உதவவில்லை.. நான் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று சிம்பு கூறியுள்ள நிலையில், நடிகர் சங்கம் அவருக்கு உதவவில்லை என்று யார் சொன்னது என விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
'நடிகர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்போது உதவக் கூடிய அமைப்பான நடிகர் சங்கம் தோல்வி அடைந்துள்ளது. நான் பிரச்னைகளைச் சந்தித்தபோது நடிகர் சங்கத்திடமிருந்து எனக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியும் என்னை காயப்படுத்தியுள்ளது. பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள்,' என்று கூறி, தனது விலகல் முடிவை சிம்பு அறிவித்திருந்தார்.

சிம்புவின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷால் கூறியதாவது:
சிம்புவுக்கு நாங்கள் உதவவில்லை என யார் சொன்னது? பீப் பாடல் பிரச்னையின்போது சிம்புவுடனும் அவருடைய தந்தை டி.ஆர். உடனும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், நான், கார்த்தி ஆகிய 3 பேரும் பேசினோம். அப்போது, பிரச்னையை சட்டரீதியாகச் சந்தித்துக்கொள்கிறோம், நீங்கள் தலையிட வேண்டாம் என்று அவர்கள் இருவருமே கூறிவிட்டார்கள். அதனால் நாங்கள் அந்தப் பிரச்னையில் தலையிடவில்லை.
இப்போது சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார். இதுபற்றி வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ள நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்களுடன் கருத்து கேட்டு ஒரு முடிவெடுக்கப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications











