பிறந்த நாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்... விஜய் பாணியில் விஷால்!
முன்பெல்லாம் தனது பிறந்த நாளன்று, தான் பிறந்த எழும்பூர் அரசு மருத்துவமனைக்குப் போய், அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது நடிகர் விஜய்யின் வழக்கமாக இருந்தது.
பின்னர் காலக் கெடுபிடி... அவர் அப்படியே மவுனமாகிவிட்டார். தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தையே கைவிடும் அளவுக்குப் போய்விட்டார்.
இப்போது அவரது பாணியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால்.

வருகிற 29-ம் தேதி நடிகர் விஷால் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அன்றைய தினம் அவர் பல நலத்திட்ட உதவிகளை அளிக்க உள்ளார்.
இதுகுறித்து அவர் தரப்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பில், 'தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுகிறார் விஷால். அனாதை இல்லம், முதியோர் இல்லம், அரசுப் பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை என பல இடங்களுக்குச் சென்று உதவிகளைச் செய்ய உள்ளார். பிறந்த நாளுக்கு முந்தைய தினத்தன்றும் ரசிகர் மன்றங்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இது தவிர தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர் நற்பணி மன்றங்கள் பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு 28, 29 ஆகிய இரண்டு தினங்களிலும் செய்கிறார்கள்.
குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அளிக்கிறார். மேலும், முதியோர் இல்லத்துக்குச் சென்று காலை உணவு வழங்கி முதியோர்களுக்கு வேட்டி, புடவையும் வழங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறந்த நாள் விழா கொண்டாட்டம், நலத்திட்ட உதவிகள் குறித்த விரிவான நிகழ்ச்சி நிரலையும் தந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











