திருப்பி நான் வழக்குப் போட்டால் தாங்க மாட்டார்கள்!- விஷால்
நடிகர் சங்கக் கட்டிடம் எங்கே என்று கேட்டதற்கு எங்களை அவமரியாதையாகப் பேசுகிறார்கள். வழக்குப் போடுகிறார்கள். திருப்பி நான் வழக்குப் போட்டால் தாங்க மாட்டார்கள் சரத்குமார் அணியினர் என்று கூறினார் விஷால்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார், நாசர் ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கும், ராதாரவி, விஷால் ஆகிய இருவரும் பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில், விஷால் அணியினரின் ஆதரவாளர்கள் கூட்டம் சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு விஷால் பேசியதாவது:

‘‘நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது பதவிக்காக அல்ல. நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டோம். அதற்கு சரியான பதில் எதுவும் இதுவரை வரவில்லை.
நடிகர் சங்க கட்டிடம் எங்கே? என்றுதான் கேட்டோம். மூலப் பத்திரத்தை கேட்கவில்லை. கட்டிடத்தைக் கேட்டால் பத்திரத்தை காட்டுகிறார்கள்.
எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் சரத்குமார், ராதாரவி ஆகிய இரண்டு பேர் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளனர். அது சரியல்ல என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது. அதற்கான விளக்கமும் இதுவரை சொல்லப்படவில்லை.
பூச்சி முருகன் பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள். சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு ஆதரவு தெரிவித்திருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவர் எந்த தயாரிப்பாளரையும் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். நானும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்தான். எங்கள் அணியில் பல தயாரிப்பாளர்களும் உள்ளனர். கலைப்புலி தாணு அறிவிப்பின்படி எங்கள் ஆதரவை எப்படி சரத்குமார் அணிக்கு வழங்கமுடியும்?
இதற்கெல்லாம் வருகிற 18-ந் தேதி இரவில் பதில் தெரிந்து விடும்.
தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் எங்கள் அணியினர் அனைவரும் தினமும் கூட்டம் நடத்தி, நடிகர்-நடிகைகளிடம் நிறை-குறைகளைkd கேட்போம். நாங்கள் கேள்வி கேட்டால், ஆபாசமாக பேசுகிறார்கள். சாதி பிரச்சினையை எழுப்புகிறார்கள். என் மீது வழக்கு போடுகிறார்கள். திருப்பி நான் வழக்கு போட்டால் தாங்க மாட்டார்கள்,'' என்றார்.
நாசர் பேசும்போது, ‘‘நாங்கள் தனி நபர் அல்ல. எங்களை பற்றி ராதாரவி அவமரியாதையாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்களை பற்றி அவமரியாதையாக பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?'' என்றார்.


Click it and Unblock the Notifications











