ஜிஎஸ்டி விவகாரம்... கமலின் கலகக் குரல் எடுபடுமா... அல்லது கோடம்பாக்க ரெய்டுக்கு துணை போகுமா?
நடிகர் கமல் ஹாசன் பொதுவெளியில் சமூகம், அரசியல் சார்ந்த பிரச்சினைகளில் தயக்கம் இன்றி விமர்சனங்களை முன்வைப்பதில் இந்திய நடிகர்களில் முதன்மையானவர்.
மெரினா ஜல்லிகட்டுப் போராட்டத்தை சர்வதேச தமிழ் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற கலைஞன். மத்திய அரசு அமுல்படுத்த உள்ள ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். இல்லையென்றால் சினிமாவை விட்டே விலகுவேன் என மத்திய அரசை நோக்கி கலகக் குரலை உயர்த்தியுள்ளார்.

இது கூடத் தெரியாதா கமல்?
சினிமா சார்ந்த பிரச்சினைகளில் சர்வதேச பார்வையுடன் கருத்து கூறும் கமலஹாசன் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இந்திய பார்வை கூட இல்லாது பிராந்திய உணர்வுடன் பேசியிருக்கிறார். இந்திய அரசின் சட்டங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவருக்கும் பொதுவானதே. இதை நன்கு கற்றுணர்ந்த கமலஹாசன் இந்தி மொழி திரைப்படங்களுக்கும் - பிராந்திய மொழி திரைப்படங்களுக்கும் வரி விதிப்பில் மாற்றம் வேண்டும் என அழுத்தமாக குரல் எழுப்பி இருப்பது அரசியலாகவே பார்க்கப்படுகிறது.

கமல் அரசியல்
எல்லா மொழிப் படங்களுக்கும் தயாரிப்புச் செலவு ஒன்றுதான். பட்ஜெட், வியாபாரம், வசூல் வேறுபடலாம். வரி விதிப்பில் இந்தியாவை இருவேறு கூறுகளாகப் பிரித்து பார்க்க சொல்வது அரசியல் தன்மை கொண்டது. இது கிட்டத்தட்ட இடஒதுக்கீடு கொள்கையைப் போன்ற பார்வை கொண்டது என்கிறது சினிமா வட்டாரம்.

வரி ஏய்ப்பு
இந்தியாவில் குறிப்பிட்ட சில நடிகர்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் சம்பளம் வாங்கும் போது மட்டுமே முழுமையான வருமான வரி செலுத்தப்படுகிறது. அனைத்து மட்டங்களிலும் உண்மையான வருமானம் மறைக்கப்பட்டு வரி ஏய்ப்பு செய்யப்படுவது திரைப்பட தொழிலின் அடிப்படை கொள்கையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சினிமா துறையிலிருந்து அரசுக்கு எச்சரிக்கை விடுப்பது காமெடியாகவே பார்க்கப்படுகிறது.

விஷாலை பலவீனப்படுத்தவா?
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய முயற்சித்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டது தமிழ் சினிமா வர்த்தக சபை. அதே அமைப்பு பிலிம்சேம்பருடன் இணைந்து கொண்டு, கமலஹாசன் அவர்களை முன் நிறுத்தி கலக குரல் எழுப்ப வைத்திருப்பதற்கு பின்ணணியில் ஆழமான அரசியல் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கத்தை பலவீனப்படுத்தும் அரசியலாக கூட இருக்கலாம் என்கிறார் தயாரிப்பாளர் ராஜேந்திரன்.

ரெய்டு வருமோ...
இந்திய சினிமாவில் நடிக்க தொடங்கும் முன் பெரும் பகுதி சம்பளத்தை வாங்கி விடுபவர்கள் தமிழ் நடிகர்களே. தங்கள் சம்பளத்தை முழுமையாக கணக்கில் காட்டாதவர்களும் இவர்களே. இவர்களில் இருந்து கமல் ஹாசன் வேறுபட்டவர் கடந்த 15 ஆண்டு களுக்கு மேல் தன் சம்பளத்தை கணக்கில் காட்டுவதால் கலகக் குரல் எழுப்புகிறார். இது மத்திய அரசைக் கோபப்படுத்துமா... இல்லை தன் அதிகாரத்தை பயன்படுத்தி கோடம்பாக்கத்துக்குள் ரெய்டை நடத்த உதவுமா... என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்!
- ராமானுஜம்


Click it and Unblock the Notifications











