சொத்தைப் பறிக்க எனக்கு மன நலம் சரியில்லை என்கிறார் தந்தை - கனகா

நடிகை கனகா விவகாரம் பெரும் குழப்பமாகி வருகிறது. அவரும், அவரது தந்தையும் மாறி மாறி குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். ஒரு பக்கம் ஆவி அமுதாவை குற்றம் சாட்டிய கனகா தற்போது தனது தந்தை மீது பாய்ந்துள்ளார்.
இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 2002ம் ஆண்டு எனது தாய் தேவிகா இறந்துவிட்டார். அப்போது நான் மிகவும் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். தனிமையால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு 2004-ம் ஆண்டு முத்துக்குமார் அறிமுகமானார். 3 வருடங்களாக நாங்கள் பழகி வந்தோம். அதன் பிறகு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். 15 நாட்கள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தோம். பின்னர் முத்துக்குமார் காணாமல் போய் விட்டார்.
அதன் பிறகு நான் என் கணவரை தேடி வருகிறேன். என் கணவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. அப்போது முத்துக்குமாரின் நண்பர் என்று அறிமுகமான அன்சூர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எங்கள் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம். எனவேதான் போலீசில் புகார் செய்யவில்லை. காணாமல் போன என் கணவரை தேடி கண்டுபிடிக்க மீடியாவின் உதவியை நாடி இருக்கிறேன்.
இதனிடையே, முத்துக்குமார் தனது பெற்றோர்கள் என்று அறிமுகம் செய்த சிதம்பரம் மற்றும் சரோஜா தம்பதியை தி.நகரில் உள்ள பாண்டிபஜாரில் இருக்கும் அப்பாசாமி அபார்ட்மெண்டில் சந்தித்து பேசினேன். அவர்கள், தங்கள் மகன் முத்துக்குமார் அமெரிக்காவில் இருப்பதாக கூறி அவரோடு என்னை பேச வைத்தனர். அவரும் என்னோடு பேசினார். இருவரும் பழகியது உண்மைதான் என்றும், ஆனால் இப்போது சேர்ந்து வாழவில்லை என்று அவர் கூறி விட்டார்.
அந்த முத்துக்குமார் இல்லை..!:
எனினும், முத்துக்குமார் என்று அவர்கள் காண்பித்த புகைப்படத்தில் இருப்பது என்னுடைய கணவர் முத்துக்குமார் அல்ல, இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அவர்களுடைய மகன், புகைப்படத்தில் காட்டப்பட்ட முத்துக்குமார் என்றால் அவரை நேரில் அழைத்து என்னோடு பேச வைக்கட்டும்.
என்னுடைய தந்தை என் மீது பலவிதமான புகார்களை கூறி வருகிறார். எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியதாக அறிகிறேன். இதற்கு காரணம் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு என்னை பிடிக்காது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சொத்து தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு சமரசத்தில் முடிந்தது. அதன்படி மகள் என்ற முறையில் எனக்கு சில சொத்துக்களும், தேவிகாவின் கணவர் என்ற முறையில் அவருக்கு சில சொத்துக்களும் கிடைத்தன. இப்போது முழு சொத்தையும் அபகரிக்க திட்டமிட்டு என் மீது மனநலம் பாதிக்கப்பட்டவள் என்ற புகாரை கூறியிருப்பதாக சந்தேகப்படுகிறேன்.
நான் மனநலம் பாதிக்கப்பட்டது உண்மை என்றால் தந்தையாகிய என்னை அவர் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாரா? அதற்கான சான்றிதழை காட்ட முடியுமா?
காணாமல் போன எனது கணவரை தொடர்ந்து தேடுவேன். தேவைப்பட்டால் கலிபோர்னியாவுக்கு சென்றும் அவரை தொடர்ந்து தேடுவேன் என்றார் கனகா.


Click it and Unblock the Notifications











