ரவி தேஜா-தப்ஸியுடன் இணையும் ஷாம்!
தமிழ் ரசிகைகளுக்கு மிகப் பிடித்த ஹீரோவாக அறிமுகமான ஷாம், இன்று தெலுங்கில் படுபிஸி. ஒரு பக்கா தமிழ் நடிகரான இவருக்கு தெலுங்கில் ஒரு முக்கிய இடம் கிடைத்திருப்பது சாதாரண விஷயமல்ல.
தெலுங்கில் ஷாம் நடித்த முதல் படம் கிக். பிளாக்பஸ்டர் எனும் அளவு பிரமாண்ட வெற்றிப் படமானது (தமிழில் தில்லாலங்கிடியாக வந்தது இந்தப் படம்). இந்தப் படத்தில் ரவிதேஜாதான் நாயகன் என்றாலும், தனக்கு நிகரான முக்கியத்துவம் ஷாமுக்கும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
இந்தப் படத்தின் வெற்றி ஷாமை தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகராக அடையாளம் காட்டியது. இந்தப் படத்துக்குப் பிறகு கத்தி எனும் படத்தில் கல்யாண் ராமுடன் இணைந்து நடித்தார் ஷாம். மல்லிகார்ஜுன் இயக்கிய இந்தப் படம் இப்போது தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. ஷாமின் பாத்திரம் விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
இப்போது இரண்டு புதிய தெலுங்குப் படங்களில் ஷாம் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று வீரா. ரமேஷ் வர்மா இயக்கும் இந்தப் படத்தில் மீண்டும் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்கிறார் ஷாம். இதில் ரவி தேஜாவும் ஷாமும் இணை ஹீரோக்கள் எனும் அளவு சரிக்கு சரி சமமான வேடம்.
ஆடுகளம் படத்தில் நடித்த தப்ஸிதான் இந்தப் படத்தின் நாயகி. ஷாமின் செக்யூரிட்டி வேடம் ரவிதேஜாவுக்கு. இதற்காக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஷாம்.
அடுத்த படம் ஷாம் தனி ஹீரோவாக நடிக்கும் ஷேத்திரம். ப்ரியாமணி அவருக்கு ஜோடி. இதில் கவுரவ வேடத்தில் நடிப்பவர் ஜெகபதி பாபு.
தெலுங்கில் பரபரவென படங்களை ஒப்புக் கொண்டுவரும் ஷாம், தமிழில் மிகக் கவனமாக படங்களைத் தேர்வு செய்கிறார். இப்போதைக்கு வி இஸட் துரை இயக்கும் படத்தில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
தனது அடுத்தடுத்த படங்கள், தெலுங்கு திரையுலகில் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து ஷாம் கூறுகையில், "தெலுங்கில் எனக்கென்று ஒரு இடம் கிடைத்துள்ளது. அதை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் நிச்சயம் என் படங்கள் அமையும். நான் இந்த நிலையை அங்கு எட்டிப் பிடிக்க ரவிதேஜா முக்கிய காரணம். அவரை நான் பிரதர் என்றுதான் அழைப்பேன். உண்மையிலேயே ஒரு சகோதரனாக, என நலனில் அக்கறை கொண்டவராக உள்ளார் ரவி தேஜா.
இந்த வீரா படத்தில் கூட தனக்கு இணையான பாத்திரத்தில், இன்னொரு ஹீரோவாக நான்தான் நடிக்க வேண்டும் என விரும்பியவர் ரவி தேஜாதான். மிக எளிமையான மனிதர். ஷூட்டிங் நேரத்தில் அவர் வீட்டிலிருந்துதான் எனக்கும் சாப்பாடு வரும். அந்த அளவு பாசம். ஈகோவே பார்க்க மாட்டார்.
தமிழில் எனக்கு எடுத்து எடுப்பிலேயே ஒரு கிரீடம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவு சிறப்பான வரவேற்பு. ஆனால் அந்த கிரீடம் ரொம்ப நாள் நிற்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று இப்போது ஆராய்வதைவிட, அடுத்து வரும் படங்களில் சிறப்பாக கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்.
அடுத்து வரும் எனது தெலுங்குப் படங்களாக இருந்தாலும் சரி, தமிழ்ப் படங்களாக இருந்தாலும் சரி, புதிய பரிமாணத்தில் என்னைப் பார்க்கலாம். அந்த நம்பிக்கையை ரசிகர்களுக்குத் தருகிறேன்", என்றார்.


Click it and Unblock the Notifications











