நமீதா ஆட்டம்-கூடியது பெருங்கூட்டம்

லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் படம் பாண்டி. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஸ்னேகா. படத்தில் நமீதாவும் இருக்கிறார். அவருக்காக கிளுகிளு பாட்டை வைத்துள்ளனர்.
இந்தப் பாட்டை பட்டையைக் கிளப்பும் வகையில் செம்பட்டி அருகே படமாக்க தீர்மானித்து அங்கு முகாமிட்டனர்.
கேத்தைய கவுண்டன்பட்டி தோட்டப் பகுதிகளிலும், நடுப்பட்டி என்ற இடத்தில் நடு சாலையிலும் நமீதாவையும் கூடவே லாரன்ஸையும் ஆட விட்டுப் படமாக்கினர்.
இந்தத் தகவல் காட்டுத் தீ போல அக்கம் பக்கத்து கிராமங்களுக்குப் பரவியது. இதையடுத்து கைக்கு கிடைத்த வாகனங்களைப் போட்டுக் கொண்டு மக்கள் நமீதாவை 'தரிசிக்க' பறந்தனர். பள்ளிக்கூட மாணவ, மாணவியர் முதல் பல் போன தாத்தாக்கள், பாட்டிக்கள் வரை பல தரப்பட்ட மக்களும் படையெடுத்து வந்து நமீதாவை பார்த்து பரவசப்பட்டனர்.
படு கிளாமரான உடையில் இருந்த நமீதா, இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும், சற்றே பதறித்தான் போனார்.
இப்படி முக்கியமான சாலையில் பெரும் கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து படப்பிடிப்புக் குழுவினரைக் கண்டித்தனர்.
ஏற்கனவே இப்பகுதிகளில் கோவில் விழாக்களில் ஆபாச ஆட்டம் ஆடக் கூடாது என நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். ஆனால் இப்படி நடுச் சாலையில் ஆபாசமான டான்ஸ் ஆடுவதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கூறி படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் நமீதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கூட்டமும், பிரிய முடியாமல் ஏக்கத்துடன் கலைந்து சென்றது.
இருப்பினும், நிலக்கோட்டை அருகே பேரணை பாலம் என்ற இடத்தில் உரிய போலீஸ் அனுமதியுடன் நமீதா, லாரன்ஸ் பாட்டை பக்காவாக படமாக்கி விட்டுத்தான் பாண்டி குழுவினர் பேக்கப் ஆனார்கள்.


Click it and Unblock the Notifications











