பர்வதம்மா தலையீடு... நிகிதா மீதான தடை நீக்கம்! - அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம்

ராஜ்குமார் மனைவி பர்வதம்மா தலையிட்டு அறிவுறுத்தியதால் இந்தத் தடையை விலக்கிக் கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முனிரத்னா இன்று அறிவித்தார்.
கன்னட நடிகர் தர்ஷன் அவரது மனைவி விஜயலட்சுமியை கொல்ல முயன்றதாக சமீபத்தில் போலீசில் புகார் செய்யப்பட்டார். இதில் அவரை போலீஸ் கைது செய்ததது. தனக்கும் தன் கணவனுக்கும் இந்த அளவு தகராறு ஏற்பட நடிகை நிகிதாதான் காரணம் என்று விஜயலட்சுமி கூறியதால், நிகிதா மீது நடவடிக்கை எடுத்தது கன்னட தயாரிப்பாளர் சங்கம்.
நிகிதா 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்கக் கூடாது என தடை விதித்தது.
இந்தத் தடை உத்தரவை நிகிதா கடுமையாக எதிர்த்தார். நிரபராதியான தன் மீது வீண் புகார் சுமத்தி, தடை விதித்துவிட்டதாகவும், இதனால் தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முறையிட்டார் நிகிதா.
அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பெரும் ஆதரவளித்தனர். கன்னட இயக்குநர்கள், நடிகர்கள், தெலுங்கு தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் தடை உத்தரவை எதிர்த்தனர். இந்தத் தடையை மீறி அவரை வைத்து படங்கள் எடுப்போம் என்றும் கூறினர்.
தமிழில் குஷ்பு உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நிகிதாவுக்கு ஆதரவு அளித்தனர்.
கன்னட நடிகர் சங்கம் நடிகை நிகிதாவை முழுமையாக ஆதரிப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி இந்த தடை உத்தரவை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது கன்னட தயாரிப்பாளர் சங்கம்.
ஆனால் அதைச் செய்யும் முன் தான் நிரபராதி, தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என நிகிதா ஒரு கடிதம் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஆனால் அப்படி எதுவும் கொடுக்கக் கூடாது என நடிகர் சங்கம் கூறிவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் அம்பரீஷ் இந்த விவகாரத்தில் தலையிட்டார்.
பர்வதம்மா கண்டனம்
இந்த நிலையில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியும் கன்னட சினிமாவில் மிகுந்த சக்தி மிக்கவராகக் கருதப்படுபவருமான பர்வதம்மா இந்த விவகாரத்தில் தலையிட்டு தடையை விலக்குமாறு அறிவுறுத்தினார்.
நிகிதா மீது தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் காட்டிய அவசரத்தைக் கண்டித்த பர்வதம்மா, தன் தரப்பு நியாயத்தை சொல்ல நிகிதாவுக்கு விளக்கம் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
"யாரோ இரண்டு மூன்று பேர் சங்கத்தில் உட்கார்ந்து கொண்டு சினிமா உலகை தீர்மானித்து விட முடியாது. இவர்களால் கன்னட திரையுலகுக்கே அவமானம்," என்றும் பர்வதம்மா எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தடை ரத்து முடிவை அறிவித்தார் சங்கத் தலைவர் முனிரத்னா.


Click it and Unblock the Notifications











