twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரிஷாவின் தொழில் பக்தி!

    By Staff
    |

    Trisha
    திரிஷாவின் தொழில் பக்தியையும், அவரது பரந்த மனசையும் பற்றி அபியும் நானும் யூனிட் விழுந்து விழுந்து வியந்து பேசிக் கொண்டிருக்கிறது.

    அப்படி என்னதான் நடந்தது?. அறிய ஆர்வம் உள்ளவர்கள் அடுத்து வரும் வரிகளை அமைதியாக படியுங்கள்.

    அது கடந்த வாரத்தில் ஒரு நாள். சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையப் பகுதி. நேரமோ நள்ளிரவைத் தாண்டி 1 மணி.

    சின்ட்ரெல்லா தேவதையாக தென்னிந்திய அழகு தேவதை திரிஷா, கூட மாட யாரும் இல்லாமல் தனியே தன்னந்தனியே மெல்லிய நடை போட்டு வந்து கொண்டிருக்கிறார். முதலில் யாரும் அவரைக் கவனிக்கவில்லை.

    ஆனால் சிலருக்கு திரிஷாவை அடையாளம் தெரிந்து விட்டது. அவ்வளவுதான் படபடவென ஓடி வந்து திரிஷாவிடம் கை குலுக்கி பரவசப்பட்டனர். முகம் சுளிக்காமல், புன்னகை சிந்திய முகத்தோடு, திரிஷாவும் அவர்களுடன் கை குலுக்கினார். சிலரிடம் அன்பாக பேசவும் செய்தார்.

    அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலும் கூறினார். திரிஷா தங்களுடன் கை குலுக்கியது, பேசியது ஆகியவற்றை எண்ணி இது கனவா, நிஜமா என்ற சந்தேகம் பலருக்கு. தாங்கள் போகப் போகும் ஊர், ஏறப் போகும் விமானம் குறித்து பலருக்கு மறந்தே போய் விட்டது. அந்த அளவுக்கு திரிஷாவிடம் பேசுவதில் அக்கறை காட்டினர்.

    அந்த சமயத்தில், கார் பார்க்கிங் பக்கமிருந்த ஒரு சத்தம். ஷாட் ஓ.கே. என்று. அப்போதுதான் திரிஷாவிடம் உசாவிக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்தது, அது ஷூட்டிங், படப்பிடிப்புக்காகத்தான் திரிஷா நடந்து கொண்டிருந்தார் என்று.

    இருந்தாலும், நாமும் திரிஷாவுடன் ஒரு சீனில் தோன்றி விட்டோம் என்ற பரவசத்தை ரசிகர்களிடம் காண முடிந்தது.

    இதைத்தான், இதற்காகத்தான் திரிஷாவை, அபியும் நானும் பட யூனிட்டார் சொல்லிச் சொல்லி புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    அது அபியும் நானும் படத்தின் ஷூட்டிங். சென்னை விமான நிலையத்தில் திரிஷா நள்ளிரவில் நடந்து வருவது போல படம் பிடிக்க தயாரிப்பாளரான பிரகாஷ் ராஜ் தீர்மானித்தார். சட்டுப்புட்டென்று விமான நிலைய அதிகாரிகளிடமும் அனுமதி பெற்றார்.

    ஆனால் இப்படி எந்தவித பாதுகாப்பும் இன்றி, துணைக்கு யாரும் வராமல் தனியாக நடந்து நடிக்க திரிஷா ஒத்துக் கொள்வாரா என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது.

    ஆனால் ஆச்சரியமாக, உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம் திரிஷா. தாராளமாக நடிக்கிறேன் என்று திரிஷா சொல்ல, அந்தக் காட்சிதான் மேற்கண்ட வரிகளில் வந்தது.

    நள்ளிரவு நேரத்திலும் திரிஷாவை கிட்டத்தட்ட 100 பேர் சூழ்ந்து கொண்டனர், கைகுலுக்கி மகிழ்ந்தனர். ஆனால் எந்த பயமும், சங்கோஜமும், தயக்கமும் இல்லாமல் அவர்களிடம் பேசி மகிழ்ந்தார் திரிஷா.

    அத்தோடு நில்லாமல் அபியும் நானும் படக் குழுவினர் விமான நிலையக் காட்சிகளை எடுத்து முடிக்கும் வரை கூடவே இருந்தாராம். காலை 5 மணியளவில்தான் அவர் அங்கிருந்தே புறப்பட்டுச் சென்றாராம்.

    திரிஷாவின் தொழில் பக்தி, படத்தின் மீது அவர் காட்டிய ஆர்வம், தொழில் மீது அவர் கொண்டுள்ள மரியாதை ஆகியவற்றை பிரகாஷ் ராஜ் பாராட்டித் தள்ளி விட்டாராம். படக் குழுவினரும் கூட திரிஷாவை பாராட்டினராம்.

    திரிஷாவிடம் தற்போது நான்கு தமிழ்ப் படங்கள் உள்ளன. விஜய்யுடன் குருவி, பிரகாஷ் ராஜின் அபியும் நானும், கெளதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலம் மற்றும் சர்வம் என பிசியாக உள்ளார்.

    தெலுங்கிலும் திரிஷா பிசியோ பிசியாம். அவர் நடித்த கிருஷ்ணா அங்கு பெரும் ஹிட் ஆகியுள்ளது. இதுபோக பூரி ஜெகன்னாத்தின் புஜ்ஜிகுடு-மேட் இன் சென்னை மற்றும் நாகார்ஜூனாவுடன் கிங் ஆகிய படங்களில் நடிக்கிறார் திரிஷா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X