சம்பளத்தை குறைத்த நாயகிகள்!

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஓடி விட்டால் போதும் உடனே நடிகர்களும், நடிகைகளும் செய்யும் முதல் வேலையே சம்பளத்தை ஜி்வ்வென்று ஏற்றி விடுவதுதான்.
நடிகர்களுக்கு கோடிகளை அள்ளிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், நடிகைகளுக்கு அவ்வளவு தாராளம் காட்டுவதில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு திரிஷாவும், நயனதாராவும் கோடியைத் தொட்டு அனைவரையும் அதிர வைத்தனர். இவர்களில் முதலில் கோடியைத் தொட்டவர் திரிஷா, அடுத்த சில மாதங்களில் நயனதாராவும் கோடிக்கு வந்து சேர்ந்தார்.
இவர்களைத் தொடர்ந்து ஷ்ரியாவும் எனக்கும் என்று கூறி ஒரு கோடியாக தனது சம்பளத்தை நிர்ணயித்தார்.
ஆனால் ஆடு அந்தப் பக்கம் பாய்ந்தால், மாடு இந்தப் பக்கம் மேயுமாம் என்ற கதையாக, நடிகைகள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக கோரிக்கை வைத்தது.
தமிழில் அதிகபட்சமாக நடிகைகளுக்கு ரூ. 50 முதல் 60 லட்சம் வரைதான் கொடுத்து வந்தனர். ஆனால் தெலுங்குக்காரர்கள் நடிகைகளுக்கு அள்ளிக் கொடுக்க ஆரம்பித்ததால் அதே மாதிரி இங்கேயும் வேண்டும் என்று நடிகைகள் கிராக்கி செய்ததால் இங்கும் சம்பளத்தை உயர்த்த வேண்டியதாயிற்று.
இதனால் படச் செலவுகள் தாறுமாறாக எகிறியது. ஆனால் திரும்பி வந்தது பெரிய நாமம்தான். பல முக்கிய நடிகர்கள் நடித்த படங்களே மண்ணைக் கவ்விய நிலையில் சிறிய தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்பையும், நஷ்டத்தையும் சந்தித்தனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் புத்திசாலித்தனமாக சுதாரித்துக் கொண்டு சம்பளத்தைக் குறைக்குமாறு நடிகைகளுக்கு கண்டிப்பான கோரிக்கை வைத்தனர். மேலும் பெரிய சம்பளம் கேட்கும் நடிகைகளையும் தவிர்க்க ஆரம்பித்து புதுமுகங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். இதனால் முக்கிய நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
ஷ்ரியா 2005-ல் 6 படங்களில் நடித்தார். 2006-ல் சிவாஜி உள்பட 5 படங்களில் நடித்தார். 2007-ல் 4 படங்கள் இருந்தன. 2008-ல் 5 படங்களில் நடித்தார். ஆனால் இந்த வருடம் 3 படங்கள்தான் கைவசம் உள்ளனவாம். ஒரு புதுப் படமும் அவரைத் தேடி வரவில்லையாம்.
திரிஷா நிலை ரொம்ப மோசம். தமிழில் ஒன்றும், தெலுங்கில் ஒன்றுமாக இரண்டே இரண்டுதான் இருக்கிறதாம். இவர் கடந்த ஆண்டு தமிழிலும், தெலுங்கிலுகமாக 6 படங்களில் அசத்திய நாயகி என்பது நினைவிருக்கலாம்.
தங்களுக்கு படம் வராதது குறித்து இவர்கள் ஆராய்ந்து பார்த்தபோது தாறுமாறான சம்பளமே காரணம் என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து இருவரும் இப்போது சம்பளத்தைக் குறைத்துள்ளனராம்.
அதேபோல நயனதாராவிடமும் தற்போது தமிழில் புதுப் படம் வரவில்லை. அவருக்கு முன்பு போல மார்க்கெட்டும் இல்லை. ரமலத் ரூபத்தி்ல் பிரச்சினையில் வேறு சிக்கிக் கொண்டுள்ளதால் அவரும் சம்பளத்தை பெருமளவில் குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி குறிப்பிட்ட சில நடிகைகளுக்கு மட்டும் பெரும் பணத்தை அள்ளிக் கொடுப்பதற்குப் பதில் அழகாக நடிக்கும் புதுமுக நடிகைகளுக்கு கொஞ்சம் தாராளமாக கொடுத்தால் போதும், தயாரிப்பாளர்கள் கையை நஷ்டம் வந்து கடிக்காது...


Click it and Unblock the Notifications











