ஷ்ரியாவுக்குப் பதில் காத்ரீனா!

பில்லாவுக்குப் பின்னர் அஜீத் நடிக்கவுள்ள படம் இது. ராஜு சுந்தரம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் ஷ்ரியா நாயகியாக நடிக்கவிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் திடீரென ஷ்ரியா இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடவே, கடுப்பாகி விட்டார் அஜீத். இதனால் ஷ்ரியாவை படத்திலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷ்ரியாவை அஜீத்தை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர் சமாதானமடைந்து ஷ்ரியாவுடன் நடிக்க சம்மதித்ததாக கடைசியாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மறுபடியும் ஷ்ரியாவை நிராகரித்து விட்டாராம் அஜீத். ஷ்ரியா தொடர்பாக வடிவேலு கூறிய கருத்துக்கள் அஜீத்துக்குப் பிடிக்கவில்லையாம். இதனால்தான் ஷ்ரியாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாராம் அஜீத்.
இப்போது அவருக்குப் பதில் காத்ரீனா கைப்பை பிடித்துப் போட்டுள்ளனராம்.
காத்ரீனா தனது காதலர் சல்மான் கானின் இந்தி போக்கிரிப் படப்பிடிப்புக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பின்னி மில்லில் நடந்த ஷூட்டிங்கை அவர் பார்த்தார். அந்த சமயத்தில்தான் காத்ரீனாவை அஜீத்தும், ராஜு சுந்தரமும் சந்தித்து பேசி புக் செய்தனராம்.
காத்ரீனா கைப்பை புக் செய்வதில் ராஜு சுந்தரத்தின் தம்பியும், போக்கிரி படத்தின் இயக்குநருமான பிரபு தேவா ரொம்பவே உதவி செய்தாராம். அவர்தான் சல்மான் மூலமாக காத்ரீனாவிடம் பேசி ஒத்துக் கொள்ள வைத்தாராம். காத்ரீனாவுக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் இப்படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகளை ஹாங்காங்கில் வைத்து ஷூட் செய்தனர். அடுத் வாரம் படத்தின் வசனப் பகுதிக்கான ஷூட்டிங் ஊட்டியில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











