பிரியங்கா, தீபிகாவைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் கால் பதிக்கும் 'நாடோடிகள்' அபிநயா
சென்னை: நாடோடிகள் புகழ் அபிநயாவுக்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிநயா. தொடர்ந்து ஈசன், 7 ம் அறிவு, வீரம், பூஜை போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன் மற்றும் தாக்க தாக்க ஆகிய படங்களும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.
இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளை மையமாக வைத்து பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரூபம் சர்மா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அபிநயாவிற்கு கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் அபிநயாவுடன் சேர்த்து மொத்தம் 56 மாற்றுத் திறனாளிகள் நடிக்கப் போவதாக அவரின் தந்தை ஆனந்தன் தெரிவித்திருக்கிறார்.
இப்படத்திற்கு லிட்டில் பிங்கர் என்று பெயர் வைத்திருக்கின்றனர். இந்த வருட இறுதியில் லிட்டில் பிங்கர் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தற்போது தொழில்நுட்பக் கலைஞர்களை, படக்குழு தேர்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழில் துடி, விழித்திரு மற்றும் அடிடா மேளம் ஆகிய படங்களில் அபிநயா தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











