பேரழகன், மொழி, சந்திரமுகி.. கலக்கல் நடிப்புக்கு பெயர்போன க்யூட் ஜோ! #HBDJyothika
சென்னை : தனது க்யூட்டான மற்றும் குறும்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஜோதிகா. விளையாட்டுத்தனமான கேரக்டர்களில் மட்டுமல்லாது, அழுத்தமான கேரக்டர்களிலும் தனது அசாத்திய நடிப்பைக் காட்டியிருக்கிறார் ஜோ.
'மொழி', 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்கள் அவரது துறுதுறு கேரக்டர் எல்லையிலிருந்து வெகுதூரத்தில் நின்றவை. 'மொழி' படத்தில் வாய் பேச இயலாதவராக கண்கள் வழியே காதல் மொழி பேசுவார் ஜோதிகா.
'சந்திரமுகி' படத்தில் கங்காவாக ரசிகர்கள் மனதில் பதிந்துபோன ஜோவுக்கு கண்கள் கொள்ளை அழகு. இப்போதும், நடிப்பில் ரசிகர்களுக்கு மெர்சல் காட்டும் ஜோதிகாவுக்கு இன்று பிறந்தநாள்.

வாலி படத்தில்
1998-ம் ஆண்டு 'தோலி சஜே கி ரஹ்னா' எனும் பாலிவுட் படத்தில் ப்ரியதர்ஷனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜோதிகா. அந்தப் படம் வெற்றி பெறவில்லை. பிறகு, 'வாலி' படத்தின் மூலம் தமிழுக்கு 1999-ம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.

முன்னணி நடிகை
ஜோதிகா, சூர்யாவுடன் நடித்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்' நல்ல பெயர் பெற்றுத் தந்தது. தொடர்ந்து 'டும் டும் டும்', 'குஷி', 'முகவரி', சிநேகிதியே', 'தெனாலி' எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். 'காக்க காக்க', 'மன்மதன்', 'வேட்டையாடு விளையாடு', 'சந்திரமுகி' ஆகிய படங்கள் முன்னணி நடிகையாக ஜோதிகாவை நிலைநிறுத்தின.

வித்தியாசமான பாத்திரங்கள்
முன்னனி நடிகை என்பதற்காக ரசிகர்கள் விரும்பும் அழகுப் பதுமையாகவே நடித்துவிட்டுப் போகவில்லை ஜோதிகா. 'பேரழகன்' படத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்தார். 'மொழி' படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் நடித்தார்.

விருதுகள்
'சந்திரமுகி' படத்திற்காக தமிழக அரசின் விருதைப் பெற்றிருக்கிறார் ஜோதிகா. 'கங்கா சந்திரமுகியா தன்னை நினைச்சுக்கிட்டா... கங்கா சந்திரமுகியாவே மாறினா...' எனும் வசனம் அவரது நடிப்பிற்குக் கிடைத்த சன்மானமாகவே கொள்ளலாம். மூன்று முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், மூன்று முறை தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ள நடிகை ஜோதிகா, கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

சூப்பர் ஜோடி
ஏழு படங்களில் தன்னோடு இணைந்து நடித்த நடிகர் சூர்யாவை 2006-ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு பலரின் ரோல்மாடலாகவும் வெற்றிகரமான சினிமா ஜோடியாகவும் வலம்வருகிறார்கள் இவர்கள். இந்த க்யூட் தம்பதிக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

ரீ-என்ட்ரி
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடித்திராத ஜோதிகா, சில நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் தலைகாட்டினார். அதைத் தொடர்ந்து ஜோதிகா மீண்டும் நடிக்கவிருப்பதாக தமிழ் சினிமாவில் தகவல் பரவியதை அடுத்து ஜோ ரசிகர்கள் உற்சாகமானார்கள். சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

36 வயதினிலே
குடும்பத் தலைவியாக சீரும் சிறப்புமாகச் செயல்பட்ட ஜோ, மீண்டும் தனது 36 வயதில் '35 வயதினிலே' படத்தின் மூலம் சினிமா உலகில் ரி-என்ட்ரி கொடுத்தார். குடும்பப் பாரங்கள் அழுத்தும் ஒரு சராசரிப் பெண், அவற்றிலிருந்து எப்படி விடுதலையாகிறார் என்பதுதான் கதை. இந்தக் கேரக்டரில் நடித்த ஜோதிகாவை தங்களின் முகமாகவே பார்த்தார்கள் தமிழகத்துப் பெண்கள்.

பெண்களின் ஐகான்
ஜோதிகாவின் ரீ- என்ட்ரியில் அடுத்த படமாக வந்த 'மகளிர் மட்டும்' பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர்களாகத் தேர்ந்தெடுத்து நடிப்பில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கிவிட்டார் ஜோதிகா. பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என இப்போதும் ஜோ செம பிஸி. முற்போக்கை விரும்பும் பெண்களின் ஐகானாக விளங்கும் ஜோ-வுக்கு ஹேப்பி பர்த்ட..!


Click it and Unblock the Notifications











