நீதிமன்றத்தில் நடிகை கனகா ஆஜர்!

'கரகாட்டக்காரனி'ல் அறிமுகமாகி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் கனகா. மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.
சென்னை அடையாறு பகுதியில், ஆவிகளுடன் பேசும் நிலையத்தை நடத்தி வருபவர் அமுதா. நடிகை கனகா, தனது தயார் தேவிகா ஆவியுடன் பேசுவதற்காக, அமுதா வீட்டிற்கு சென்று பழகியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் பணிபுரியும் கம்ப்யூட்டர் எஞ்ஜினியருடன் கனகாவுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களில் கனகாவை விட்டு, அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
தனது கணவர் பிரிந்து செல்வதற்கு, அமுதாதான் காரணம் என்று, கனகா குற்றம்சாட்டினார். கனகாவின் கணவருக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அமுதா மறுத்தார்.
தனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், கனகாவின் குற்றச்சாட்டு அமைந்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவதூறு வழக்கு ஒன்றை சைதாப்பேட்டை கோர்ட்டில் அமுதா தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே அமுதா வாக்குமூலம் அளித்து விட்டார். அவரது நிறுவனத்தை சேர்ந்த, இரண்டு ஊழியர்கள் மட்டும் வாக்குமூலம் அளிக்க வேண்டும். இந்நிலையில் செவ்வாய்கிழமை சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் கனகா ஆஜரானார். இவ்வழக்கை ஏப்ரல் மாதம் 9ம்தேதிக்கு தள்ளிவைக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











