ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ்

பாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்துள்ளார். இவர் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து 'பிராக்' எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது,
"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்" என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.
மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.
கலவரத்தை மறக்க முடியுமா?
2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.


Click it and Unblock the Notifications











