தொழிலதிபரை மணந்து "செட்டிலானார்" சங்கவி.. தொடர்ந்து நடிப்பாராம்!
பெங்களூர்: 1995 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த நடிகை சங்கவியின் திருமணம், இன்று காலை பெங்களூரில்
நடைபெற்றது.
இன்று காலை 9-10.30 மணியளவில் தொழிலதிபர் வெங்கடேஷை மணந்து தனது திருமண வாழ்க்கையில் சங்கவி அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இந்தத் திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
1993 ம் ஆண்டு அஜீத்தின் அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சங்கவி. தொடர்ந்து ரசிகன், கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நாட்டாமை, உளவுத்துறை, ரிஷி, கட்டுமரக்காரன் போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
கடைசியாக 2005 ம் ஆண்டில் வெளியான 'ஆணை' படத்தில் சங்கவி நடித்திருந்தார். அதற்குப்பின் கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் சங்கவியின் பெற்றோர் அவருக்கு பொருத்தமான மணமகனைத் தேடி தொழிலதிபராக இருக்கும் வெங்கடேஷ் என்பவரைத் தேர்வு செய்தனர்.
பெற்றோரின் தேர்வு சங்கவிக்கும் பிடித்துப் போனதில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இன்று காலை 9-10.30 மணியளவில் சங்கவி-வெங்கடேஷ் திருமணம் பெங்களூரில் நடைபெற்றது.
திருமணம் குறித்து சங்கவி "இது காதல் திருமணம் அல்ல. இரண்டு பேரின் பெற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.திருமணத்துக்குப்பின் நான் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் அனுமதி கொடுத்து இருக்கிறார்'' என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











