நயன்தாராவை பின்பற்றும் அமலாபால்.. ஒரு முடிவோடுதான் கவர்ச்சியில் இறங்கியிருக்கிறார்!
நயன்தாராவை அமலாபால் பின்பற்றுகிறார்
சென்னை: பல விஷயங்களில் அமலா பால் நயன்தாராவை பின்பற்றுகிறாராம்.
சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். முதல்படமே ஏகப்பட்ட விமர்சனங்களை எழுப்பியது.
அதனைத்தொடர்ந்து பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் அமலா பால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் வெளியான "ஆடை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வளவு கவர்ச்சியாக ஒருவர் நடிக்க முடியுமா என்று கேள்வி எழுந்ததோடு தமிழின் சன்னி லியோனா அமலா பால் எனவும் விமர்சித்தனர். ஆனால் அதற்கெல்லாம் அவர் நயன்தாராவை பின்பற்றுவதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

அறிமுகம்
ஐயா திரைப்படத்தில் நயன்தாரா அறிமுகமானபோது மிகவும் அடக்க ஒடுக்கமான பப்ளி பெண்ணாக இருந்தார். குண்டு உடல், கொழு கொழு கன்னம் என பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவி போலதான் ஆரம்ப கால திரை வாழ்க்கை இருந்தது. சந்திரமுகி, கஜினி போன்ற படங்களில் நடித்திருந்தாலும், அவரை பெரிய நடிகையாக யாரும் பார்க்கவில்லை. நயன்தாரா என ஒரு நடிகை இருக்கிறார் என்றுதான் பார்த்தார்கள்.

வல்லவன்
ஆனால், எஸ்ஜே.சூர்யாவுடன் அவர் நடித்த கள்வனின் காதலி திரைப்படம் நயன்தாராவின் நடிப்பு திறமைக்கு அஸ்திவாரமிட்டது. அவருடைய நடிப்பு இப்படத்திற்கு பலம் என பத்திரிகைகள் எழுதின. அதனைத்தொடர்ந்து சிம்புவுடன் நடித்த வல்லவன் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் கொடுத்தது என்பது தெரிந்த விஷயம்தான். கள்வனின் காதலி வரை பால் மாறாத முகத்தோடு இருந்தவர், ட்ரிம்மாகி கவர்ச்சியில் இறங்கினார். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி முக்கியம் என்ற எழுதப்படாத விதியை பின்பற்ற ஆரம்பித்தார். அதன் முடிவு மிகத்தெளிவாக அவர் பில்லா திரைப்படத்தில் பிகினியில் வரும்போது தெரிந்தது.

ராஜா ராணி
ஆனால் கவர்ச்சி மட்டுமே நம்மை நிலைநாட்டாது என்பதை அவர் அப்போதே உணர்ந்திருக்கக் கூடும். ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்துவிட்டால் அதையே வழக்கமாக்கி விடுவார்கள் என்று தெரிந்து, வலுக்கட்டாயமாக அதை தவிர்த்து கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள யாரடி நீ மோகினி, ராஜா ராணி, மாயா போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து மேஜை உயர்த்திக்கொண்டார். இதற்கு இடையில் அவர் வாழ்க்கையில் நடந்த பல கசப்பான சம்பவங்களும், எப்போதுமே லைம் லைட்டில் வைத்திருக்க உதவின. சரியான மற்றும் சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்.

மைனா
சிந்து சமவெளி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தாலும், சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது மைனா என்றே சொல்லலாம். தாவணி பாவாடையில் வந்த மைனாவைப் பார்த்து வித்தார்த் போல பலர் காதல் வயப்பட்டனர். அப்படத்தின் கோர முடிவு அவரை தமிழக மக்களின் நெஞ்சில் தூக்கி நிறுத்தியது. சிந்து சமவெளியில் வாங்கிய திட்டுக்களுக்கு ஈடுசெய்யும் விதமாக பாராட்டுக்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களே... எகா: தெய்வத் திருமகள், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மாக்கணக்கு எனச் சொல்லலாம். இவற்றிலெல்லாம் மாறுபட்ட கதாபாத்திரத்தை செய்தார் அமலாபால்.

ஆடை
குடும்பப் பெண், காதலி, குழந்தைக்கு தாய் என பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களை செய்துவிட்ட அமலா பால், முழுக்க முழுக்க தாராளமாக கவர்ச்சிகாட்டும் கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அப்படி நடிக்க முடியாதவர் இல்லை என்பதை நிரூபிக்கவே ஆடை திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டியுள்ளார் அமலா பால். படத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரியும் என அவர் கூறியுள்ளார். ஆனால் நயன்தாரா எப்படி எல்லாவிதமான கதாப்பாத்திரத்திலும், நடித்து நிரூபித்தாரோ அதேபோல், தானும் செய்ய வேண்டுமென அவரை ரோல் மாடலாக பின்பற்றுவதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











