எனக்கு குழந்தையெல்லாம் இல்லை.. நம்பாதீங்க.. சொல்கிறார் அஞ்சலி
சென்னை: தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாக வெளியான தகவலை நடிகை அஞ்சலி மறுத்துள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருந்த நடிகை அஞ்சலி தற்போது, விமலுடன் மாப்ள சிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் இருந்து திடீரென அஞ்சலி மாயமாகி விட்டதாக தகவல் வெளியானது. மேலும், ஏற்கனவே அவருக்கு திருமணமாகி விட்டதாகவும், குழந்தைகளும் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார் அஞ்சலி. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாப்ள சிங்கம்...
அப்பாடக்கர், மாப்ள சிங்கம் படங்களில் கடந்த ஆறு மாதமாக ஓய்வு இல்லாமல் நடித்தேன். எனது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டேன்.

வதந்தி...
மாப்ள சிங்கம் படப்பிடிப்பில் இருந்து நான் காணாமல் போய்விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இது குறித்து அந்த படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ புகார் எதுவும் செய்யவில்லை. அப்படி இருக்க இது போன்ற வதந்தி ஏன் பரவியது என்று புரியவில்லை.

தெலுங்குப் படங்கள்...
தற்போது தெலுங்கு படமொன்றில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். கடந்த காலங்களில் சில பிரச்சினைகளால் தமிழ் படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டேன். ஆனாலும் தெலுங்கு படங்களில் அப்போது நடித்துக் கொண்டுதான் இருந்தேன்.

என்னைப் பற்றி தெரியும்..
தற்போது எல்லாம் நல்ல படியாக போய்க்கொண்டு இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். உண்மைகளையும் அவர்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள்.

யார் பரப்பிய வதந்தி...
என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. அப்படி வதந்தி பரப்பியவர்கள் யார் என்று எனக்கு தெரியாது.

பிரச்சினைகள் தீர்ந்து விட்டன...
எனது கடந்த கால விஷயங்கள் பற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை. இப்போது அந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விட்டன.

தைரியமான பெண்...
நான் தைரியமான பெண், பிரச்சினைகளை நானே சமாளித்தேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன்.

அது உறவினர் குழந்தை...
எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் ஒரு குழந்தை இருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு உள்ளன. இது வதந்திதான். என் உறவினரின் குழந்தையோடு நின்று போட்டோ எடுத்து இருந்தேன். அதை வைத்து எனக்கு குழந்தை இருக்கிறது என்று புரளி கிளப்பி விட்டார்கள்.

தனியாகத் தான் இருக்கிறேன்...
எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். உடல் எடையை ஏற்கனவே ஒன்பது கிலோ குறைத்து இருந்தேன். இப்போது மேலும் மூன்று கிலோ குறைத்துள்ளேன். இறைவி படத்தில் என்னை ஒல்லியாக பார்க்கலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











