பைசன் வெற்றி.. உருகிப்போன அனுபமா பரமேஸ்வரன்.. இவ்வளவு ஃபீல் செய்றாங்களே.. ச்ச சூப்பர்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கும் பைசன் திரைப்படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. வசூலிலும் 55 கோடி ரூபாயை இதுவரை அள்ளியிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் துருவ்வுக்கு கோலிவுட்டில் சிறப்பான தொடக்கம் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் படம் பற்றி உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கியிருக்கிறார். இது அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. மேலும் சாதிய ஒற்றுமையை பற்றியும் மாரி இதில் தெளிவாகவும் பக்குவமாகவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் மெகா ஹிட்: இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு முழு திருப்தி கிடைத்தது. அதிலும் துருவ் விக்ரமின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டார்கள். இரண்டு வருடங்கள் அவர் கடுமையாக உழைத்ததற்கான கூலியை படம் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்றும்; இனி அவரது திரைப் பயணம் சிறப்பாக அமையும் என்றும் பாராட்டு மழை பொழிந்தது.

50 கோடி ரூபாய் வசூல்: முக்கியமாக உலகம் முழுவதும் படமானது 55 கோடி ரூபாயை இதுவரை வசூலித்திருக்கிறது. இதன் மூலம் 50 கோடி ரூபாய் வசூல் துருவ் கரியரில் முதன்முறையாக வந்திருக்கிறது. கண்டிப்பாக இவ்வெற்றி அவரது மார்க்கெட்டை மேற்கொண்டு உயர்த்தும் என்று நம்பலாம். இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் பைசன் பற்றி உருக்கத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அனுபமாவின் பதிவு: அவர் அந்தப் பதிவில், "பைசன் திரைப்படம் வெளியாகி பத்து நாட்கள் நிறைவடைகின்றன. என்னுடைய இதயம் பெற்ற அன்பை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்பதை கற்றுக்கொண்டே இருக்கிறேன். சில படங்கள் மட்டும்தான் வேலையாக மட்டுமின்றி உணர்வுகளாகவும் மாறுகின்றன. பைசன் படமும் எனக்கு அப்படித்தான். நான் வாழ்நாள் முழுவதும் போற்றும் படமாக அது எனக்கு அமைந்துவிட்டது.
நன்றியுடன் காப்பாற்றுவேன்: இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி. இப்படத்துக்காக என்னை தேர்ந்தெடுத்ததற்கும், இந்தக் கதையின் பாத்திரத்தில் என்னை கண்டதற்கும் நன்றி. உங்கள் நம்பிக்கையை நான் எப்போதுமே நன்றியுடன் காப்பாற்றுவேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் அனுபமாதான் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











