twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாம் முடிஞ்சு போச்சு-அர்ச்சனா

    By Staff
    |

    என் வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்டது, சுற்றியிருந்தவர்கள் என்னை எல்லா வகையிலும் ஏமாற்றி விட்டார்கள். இனிமேல் எனது வாழ்க்கையில் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று விட்டேற்றியாக பேசுகிறார் ஊர்வசி அர்ச்சனா.

    ஒரு காலத்தில் அசத்தல் நடிகையாக அறியப்பட்டவர் அர்ச்சனா. நீங்கள் கேட்டவை, வீடு என பல படங்களில் திறம்பட்ட நடிப்பைக் கொடுத்தவர் அர்ச்சனா. ஆனால் காலப் போக்கில் காணாமல் போய் விட்டார்.

    அப்படிப்பட்ட அர்ச்சனாவை பெரிய இடைவெளிக்குப் பின்னர் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் பார்க்க நேர்ந்தபோது நம்ம அர்ச்சனாவா இது என்ற ஆச்சரியம் வந்தது. படம் வந்த சூட்டோடு பத்திரிக்கையாளர்களையும் நீண்ட காலத்திற்குப் பின்னர் சந்தித்தார் அர்ச்சனா.

    மனம் விட்டுப் பேசியவர் மனதில்தான் எத்தனை சோகங்கள், குமுறல்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள். அவர் பேசிய வார்த்தைகளிலிருந்து அவற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    இதுவரை தனியாகவே இருந்து விட்டேன். எல்லாவற்றையும் இழந்து விட்டேன். என்னைச் சுற்றிலும் இருந்தவர்கள் எல்லா வகையிலும் என்னை ஏமாற்றி விட்டார்கள். இனி என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.

    எனது வாழ்க்கையில் கல்யாணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. அந்த ஐடியாவை விட்டு வெகு நாட்களாகி விட்டது.

    என் நலம் விரும்பிகள் பலரும் கல்யாணத்தைப் பற்றித்தான் கேட்கின்றனர். ஆனால் கல்யாணம் செய்து கொண்டு அனுபவிப்பதற்கு இனிமேல் என்ன இருக்கிறது. சிலரை நான் நிறைய நம்பினேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்.

    தொடர்ந்து நான் நடித்துக் கொண்டிருந்திருந்தால் எனது சினிமா கேரியர் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் இப்போது அதைப் பற்றிப் பேசி என்ன பிரயோஜனம்.

    எனக்கு மீண்டும் நடிப்பதில் ஆட்சேபனை இல்லை. என்னால் நல்ல நடிப்பைத் தர முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வரை நடிப்பேன். பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில், சுரேஷ் கிருஷ்ணா என்னை சரியாகப் பயன்படுத்தினார்.

    படம் முழுவதும் நான் வரும் வகையில் கேரக்டரை அமைத்திருந்தார் (அதுதான் அர்ச்சனாக்கா படம் போண்டியாகி விட்டது) என்றார் அர்ச்சனா.

    பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்புதான் அர்ச்சனா. அவரது படங்களில் நிரந்தர நாயகியாகவும் இருந்து வந்தார். நீங்கள் கேட்டவை மூலம் அறிமுகமாகி வீடு வரை பாலுமகேந்திராவின் கேமராக் கைகளால் குட்டுப் பட்டவர் அர்ச்சனா.

    இருவரும் சில காலம் சேர்ந்து வாழ்ந்ததாகவும், சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின. எப்படியோ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்திருப்பது சினிமாவுக்கு நிச்சயம் நல்ல விஷயம்தான்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X