பூமிகாவின் 'திடும்' டும் டும்!
| Click here for more images |
தமிழில் ரோஜாக் கூட்டம், சில்லென்று ஒரு காதல், பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பூமிகா. தெலுங்கிலும் நிறையப் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்து வந்தார்.
மும்பையைச் சேர்ந்த பூமிகா, நாசிக்கைச் சேர்ந்த யோகா மாஸ்டரான பரத் தாக்கூரை கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தார். இந்தக் காதலை படு கமுக்கமாக வைத்திருந்தனர். இதுகுறித்த செய்திகள் வந்தபோதெல்லாம் அதுகுறித்து இருவருமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
மான் புகழ் சல்மான்கான் மூலமாகத்தான் பரத் தாக்கூருடன், பூமிகாவுக்கு அறிமுகம் ஏற்பட்டதாம். யோகா கற்க வந்த பரத், பூமிகாவின் மனதில் இடம் பிடித்தார். ஒரு மாதத்திற்கு முன்புதான் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். இதையடுத்து தனது திருமணச் செய்தியை பூமிகா பகிரங்கமாக அறிவித்தார்.
மும்பையில் அக்டோபர் 25ம் தேதி திருமணம் நடைபெறும் என பூமிகா தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென விஜயதசமி தினமான நேற்று நாசிக்கில் வைத்து கல்யாணத்தை முடித்து விட்டார்கள்.
நெருங்கிய உறவினர்கள், இரு தரப்பு நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர். விஜயதசமி தினம் மிகவும் நல்ல தினம் என்பதால்தான் கல்யாணத்தை திட்டமிட்ட 3 நாட்களுக்கு முன்பே முடித்து விட்டதாக கூறப்படுகிறது.
தனது கல்யாணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பூமிகா. அப்போது அவர் கூறுகையில், புதன்கிழமைதான் கல்யாணம் நடப்பதாக இருந்தது. ஆனால், விஜயதசமி தினம் மிகவும் நல்ல நாள் என்பதால் முன்கூட்டியே நடத்தி விடலாம் என்று எனது பெற்றோர் விரும்பினர். இதனால்தான் முன் கூட்டியே கல்யாணம் நடந்து விட்டது.
பரத் ரொம்ப நல்ல மனிதர். பக்கா ஜென்டில்மேன் என்று சாதாரணமாக சொல்லி விட முடியாது. அதற்கும் மேலானவர் அவர். என்னைப் பற்றிய அனைத்துமே (அப்படீன்னா?) அவருக்கு தெரியும். என்னை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் அவர்.
எனது விருப்பத்திற்கு ஒருபோதும் குறுக்கே நிற்க மாட்டார். நான் தொடர்ந்து நடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிமிடம் முதல் எனது வாழ்க்கையின் அருமையான தருணங்களை அனுபவிக்கப் போகிறேன் என்றார் கல்யாண வெட்கம் முகத்தில் தாண்டவமாட.
யோகா கணவருடன் யோக வாழ்க்கை வாழ வாழ்த்துவோம்!


Click it and Unblock the Notifications











