குழப்பத்தில் மன்மத ராணி
சாயா சிங்குக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் தெலுங்குப் பக்கமாய் பார்வையை நகர்த்தியுள்ளார்.
திருடா திருடியில், தெத்துப் பல்லுடன், சண்டைக் கோழியாக தனுஷுடன் மோதிக் கலாய்த்த சாயாசிங் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று பேசினார்கள். ஆனால், முன்னதாக கன்னடப் படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் காரணமாக அங்கு நடிக்கப் போய்விட்டார்.
கன்னடத்தில் சில படங்களை முடித்துவிட்டு கோடம்பாக்கத்துக்கு வந்தவரை சீண்ட ஆளில்லை. இதனால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் வீட்டுப் படிகளில் ஏறி இறங்கினார்.
அப்போது மன்மதா ராசா பாடலுக்கு சாயா போட்ட ஆட்டம் நினைவுக்கு வர, அருள் படத்தில் விக்ரமுடன் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட வைத்தார்கள். கதாநாயாகியாக ஒரே ஒரு படத்தில் நடித்த நிலையில் ஒரு பாட்டுக்கு டான்ஸா என்று முதலில் தயங்கிய சாயா, பின்னர் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்.
அருள் படம் சரியாக போணியாகாவிட்டாலும் அதில் சாயா ஆட்டம் போட்ட சூடாமணி பாட்டு ஹிட் ஆனதால் சாயாவுக்கு கொஞ்சம் மவுசு கூடியது. இதைப் பயன்படுத்தி கதாயநாயகி வேட்டையில் சாயா இறங்க, இரு படங்களில் ஹீரோயின் வேடம் கிடைத்துள்ளது.
ஆனால், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஏதும் கிடைக்கவில்லை. படமே ஓடாவிட்டாலும் தொடர்ந்து படங்களைத் தந்து கொண்டிருக்கும் அர்ஜூனுடன் ஜோடியாக ஜெயசூர்யா என்ற படமும், பிளாப் ஹீரோவான பாலாவுக்கு ஜோடியாக அம்மா அப்பா செல்லம் என்ற படமும் தான் புக் ஆகியுள்ளன.
இதனால் வருத்தத்தில் இருக்கும் சாயா தெலுங்குப் பக்கமாய் தனது வலையை விரித்தார். முன்னணி ஹீரோக்களை வலியப் போய் சந்தித்துப் பேசிப் பார்த்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை.
தமிழைப் போலவே அங்கும் மூன்றாம் ரக ஹீரோக்களுடன் நடிக்கவே வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இதனால் மன்மத ராணியின் முகத்தில் இப்போதெல்லாம் சிரிப்பு மிஸ்ஸிங்.
இதனால் பேசாமல் தமிழில் கிடைக்கும் சிங்கிள் டான்ஸ் ஆபர்களை அள்ளிப் போட்டு கும்தலக்கா ஆட்டத்தைத் தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











