இந்த மூஞ்சிக்கு சினிமாவா-ன்னு கிண்டல் பண்ணாங்க!- தீபிகா படுகோன்
இந்த மூஞ்சிக்கு சினிமா கேக்குதா என்று நான் நடிக்க வந்தபோது பலரும் கேலி செய்தனர் என்று நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் முதல் நிலை நாயகி தீபிகா படுகோன். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்' அனிமேஷன் படத்தில் நடித்தார். மும்பையில் நேற்று தனது 31-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிய தீபிகா, தனது சினிமா வாழ்க்கை பற்றிய நினைவுகளைப் பகிரிந்து கொண்டார். அவர் கூறுகையில், "நான் பள்ளியில் படித்தபோது விளையாட்டு வீராங்கனையாக இருந்தேன். தேசிய அளவில் பேட்மின்டன் விளையாடி இருக்கிறேன். அதன் பிறகு மாடலிங் துறைக்கு வந்தேன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வாய்ப்பு தேடி அலைந்தேன்.

எனது படங்களை பிரபல டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் கொடுத்து நடிக்க வாய்ப்பு தரும்படி வேண்டினேன். அவர்கள் இந்த முகத்துக்கெல்லாம் சினிமாவா? நீ நடித்தால் யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் சொல்லி என்னை கிண்டல் செய்தனர். மனதை தளர விடாமல் பட கம்பெனிகளின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினேன்.
முதலாவதாக ‘ஐஸ்வர்யா' என்ற கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ‘நியு இயர்' என்ற இந்தி படத்தில் நடித்தேன். அந்த படம் பாதியில் நின்றது. இனி சினிமா நமக்கு அவ்வளவுதான் என்று விரக்தி ஏற்பட்டது. அதன்பிறகு ‘ஓம் சாந்தி ஓம்' என்ற படம் கிடைத்தது. அது 2007-ல் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது," என்றார்.


Click it and Unblock the Notifications











