இந்த வாட்டியும் விருது கிடைக்கலையே.. விசனத்தில் தீபிகா படுகோனே
மும்பை: தேசிய விருது கிடைக்கவில்லை என்பதால் நடிகை தீபிகா படுகோனே, மிகவும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
63 வது தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் விசாரணை, பாகுபலி போன்ற தென்னிந்தியப் படங்கள் விருதுகளை வென்றன.

மேலும் இளையராஜா, சமுத்திரக்கனி, ரித்திகா சிங் ஆகியோருக்கு விருதுகள் கிடைத்ததில், மொத்தம் 5 தேசிய விருதுகளை தமிழ் சினிமா கைப்பற்றியது.
இதில் சிறந்த நாயகன், சிறந்த நாயகிக்கான தேசிய விருதை அமிதாப் பச்சன்(பிக்கு), கங்கனா ரனாவத்(தனு வெட்ஸ் மனு) இருவரும் வென்றனர்.
இந்த விருதுகள் அறிவிக்கப்பட்ட பின் விக்ரமிற்கு விருது கொடுக்காதது தொடங்கி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தி நடிகையான தீபிகா படுகோனே, தேசிய விருதுகளால் ரொம்பவே வருத்தத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.
கடந்தாண்டு வெளியான பிக்கு மற்றும் பாஜிராவ் மஸ்தானி 2 படங்களிலும் தீபிகா படுகோனே நன்றாக நடித்திருந்தார்.விமர்சனம் மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
மேலும் பல்வேறு விருதுகளையும் இப்படங்கள் வாங்கிக் குவித்தன.இதனால் இந்த வருடம் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று தீபிகா ஆவலுடன் காத்திருந்தார்.
ஆனால் சிறந்த நடிகைக்கான விருதை 2 வது முறையாக கங்கனா ரனாவத்திற்கே கொடுத்து விட்டனர். இதுதான் தீபிகாவின் வருத்தத்திற்கு காரணமாம்.
தீபிகா நடிப்பில் வெளியான பிக்கு, பாஜிராவ் மஸ்தானி இரண்டு படங்களுக்குமே தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











