கோலங்கள் அபியின் 40 வது பிறந்த நாள் இன்று
சென்னை: நடிகர் விஜய் பிறந்த நாள் என்று ஊரே அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில் மறுபக்கம் , சத்தமேயில்லாமல் தனது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார் நடிகை தேவயானி.
1974 ம் வருடம் மும்பையில் ஜெயதேவ் - லட்சுமி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்த தேவயானி இன்று தனது 40 வது பிறந்த தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
1993 ம் வருடம் துஸ்கோர் துளி என்ற பெங்காலிப் படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி பதித்த தேவயானி, 22 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் தனது அர்ப்பணிப்பு கலந்த நடிப்பால் நீடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் நகுல் தேவயானியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொட்டாசிணுங்கி மூலமாக
தமிழில் 1994 ம் வருடம் தொட்டாசிணுங்கி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்த தேவயானிக்கு தொட்டாசிணுங்கி பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

கல்லூரி வாசல்
இரண்டாவது படத்தில் முதல்முறையாக அஜித் மற்றும் பிரசாந்துடன் இணைந்து கல்லூரி வாசல் படத்தில் நடித்தார். கல்லூரி வாசலும் காலை வாரிவிட்டது. அஜித்,பிரசாந்த் மற்றும் தேவயானி மூவருமே திரையுலகில் வளரும் இளம்நடிகர்களாக இருந்தபோது நடித்தபடம் கல்லூரி வாசல் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலில் கோட்டை கட்டிய காதல் கோட்டை
1996 ம் ஆண்டு இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி நடித்து வெளிவந்த காதல் கோட்டை படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. சிறந்த இயக்கம், திரைக்கதை ஆகிவற்றிற்காக 2 தேசிய விருதுகளை வாங்கினர் இயக்குநர் அகத்தியன். மேலும் இந்தப் படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு பரிசைப் பெற்றார் நடிகை தேவயானி.

உச்சத்தில் ஏறிய புகழ்
காதல் கோட்டையைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய் ,வல்லரசு, ஆனந்தம், அழகி, மறுமலர்ச்சி மற்றும் பிரண்ட்ஸ், போன்ற படங்கள் ஹிட்டடித்து வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியைக் கொடுத்தன.

விஜயுடன் 2 படங்கள்
நடிகர் விஜயுடன் பிரண்ட்ஸ் மற்றும் நினைத்தேன் வந்தாய் என இரு படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

6 மொழிகளில் 80 படங்கள்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட 6 மொழிகளில் சுமார் 80 படங்களுக்கும் அதிகமாக நடித்து இருக்கிறார் தேவயானி.

காதல் திருமணம்
2001 ம் ஆண்டு தமிழ் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து கைபிடித்த, இவருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கோலங்கள் அபிநயா
சன் டிவியில் தேவயானி நடிப்பில் வெளிவந்த கோலங்கள் சீரியல் 7 வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் குடும்பங்களையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. படங்களில் நடித்து சம்பாதித்த புகழை விட கோலங்கள் சீரியல் மூலம் தமிழ்நாட்டில் தேவயானிக்கு கிடைத்த புகழ் அதிகம்.

விருதுகள் மொத்தம் 10
22 கால திரைப்பட வாழ்க்கையில் 2 கலைமாமணி விருதுகள் உள்பட 10 ற்கும் அதிகமான விருதுகளை வாங்கி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











