15 கோடி சம்பளம் கேட்கிறாரா டியூட் ஹீரோயின்?.. ராஷ்மிகாவை ஓரங்கட்டிட்டாரா?.. மமிதா பைஜு பதில்!
சென்னை: பிரேமலு படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகை மமிதா பைஜு தென்னிந்தியத் திரையுலகில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும், ரசிகர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பும் கிடைத்துள்ளன. 100 கோடி கிளப்பில் பிரேமலு படத்தைத் தொடர்ந்து மமிதா பைஜுவுக்கு டியூட் படமும் இணைந்துள்ளது.
படத்தின் வெற்றியால், பிரதீப்-மமிதா ஜோடிக்கு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. மனோரமா ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில், மமிதா தனது திரைப் பயணத்தைப் பற்றியும், படத்தின் வெற்றி அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவை விட அதிக சம்பளம் கேட்பதாக மமிதா பைஜு பற்றி பரவும் வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
டியூட் வாய்ப்பு கிடைத்தது எப்படி?: "சூப்பர் சரண்யா படத்தைப் பார்த்த பிறகுதான் இயக்குநர் கீர்த்திஸ்வரன் சார் 'டியூட்' படத்திற்காக என்னை அழைத்தார். ஒரு மலையாளியாக இருந்தாலும், தமிழ் கலாச்சார பின்னணியிலான ஒரு கதாபாத்திரத்தை நம்பி என்னிடம் கொடுத்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அந்த நம்பிக்கை என் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்று மமிதா கூறினார்.
"முன்னதாக, ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த 'ரெபல்' என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தாலும், என் கதாபாத்திரம் குறைவாக இருந்தது. ஆனால் 'டியூட்' படத்தில் இவ்வளவு வலுவான, மையமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற பெரிய பொறுப்புணர்ச்சி ஏற்பட்டது. இந்த கதாபாத்திரத்தை நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் அணுகினேன். எனக்கு 'டியூட்' மிகவும் சிறப்பான படம்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மமிதா-பிரதீப் கெமிஸ்ட்ரி: கீர்த்திஸ்வரன் அலுவலகத்தில் நடந்த ஸ்கிரிப்ட் ரீடிங் மற்றும் ஃபோட்டோஷூட்டின் போதுதான் நாங்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்தோம். பிரதீப், சக கலைஞர்களை எப்போதும் இயல்பாக உணர வைப்பார். அதனால், எனக்கு எந்த பதட்டமும் ஏற்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இருவரும் நட்புடன் பழகினோம், அது படப்பிடிப்பை எளிதாக்கியது.

15 கோடி சம்பளமா?: டியூட் படத்தைத் தொடர்ந்து பிரேமலு 2 படத்திற்காக மமிதா பைஜு 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு, "நான் ₹15 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் பரவின. நான் சமூக வலைத்தளங்களில் அதிகம் இருப்பதில்லை, ஆனால் ஒருவர் எனக்கு அந்த லிங்கை அனுப்பினார், அதைப் பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன்! மக்கள் இதை முழுமையாக நம்பியது மட்டுமல்லாமல், 'அவள் ₹15 கோடி கேட்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளாகிவிட்டாளா?' என்று கூட சிலர் எழுதியிருந்தனர். சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்து செய்திகளும் உண்மை இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார். ராஷ்மிகா மந்தனாவை விட மமிதா பைஜு அதிக சம்பளம் கேட்கவில்லை என்றும் தனது தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய சம்பளம் எவ்வளவு என்று தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
விஜய், சூர்யா, தனுஷ் ஜோடி: விஜய் சாருடன் நடித்தது ஒரு கனவு நனவானது போல இருந்தது. படப்பிடிப்பின் முதல் நாளிலேயே, நான் படப்படப்பாகவும் அதேசமயம் உற்சாகமாகவும் இருந்தேன், ஏனெனில் நான் அவருக்கு அருகில் நிற்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. ஆனால் அவர் என்னிடம் வந்து பேசினார், என்னை முழுமையாக நிம்மதியாக உணர வைத்தார். அந்த கணத்திலிருந்து, நான் அவர்களில் ஒருவராக உணர்ந்தேன் என ஜன நாயகன் படத்தில் இணைந்த அனுபவத்தை பகிர்ந்தார்.
நான் சூர்யா சாருடன் 'வணங்கான்' என்ற படத்தில் நடிக்கவிருந்தேன், ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னர், வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தபோது, சூர்யா சார் என்னிடம், 'இறுதியாக, நாம் ஒன்றாக நடிக்கிறோம்' என்று கூறினார்.
தனுஷ் சார் எங்கள் படப்பிடிப்புகளில் எனக்கு நிறைய உதவினார். ஒருமுறை, அவரது நடிப்பைப் பார்த்து நான் பிரமித்துப்போய் என் வசனத்தையே மறந்துவிட்டேன். அத்தகைய அற்புதமான நடிகருடன் பணியாற்றியது உண்மையிலேயே மகிழ்ச்சி" எனக் கூறியுள்ளார். விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் படத்திலும் மமிதா பைஜு தான் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











