ஜெனீலியாவின் புது முடிவு

பாய்ஸ் மூலம் சினிமாவுக்கு வந்த ஜெனீலியாவுக்கு அந்தப் படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால் சிக்கென இருந்த ஜெனீலியாவை வைத்துப் படம் எடுக்க கோலிவுட்டினருக்குத்தான் பெரும் தயக்கம். இதனால் ஜெனீலியாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்புகள் தமிழில் வரவில்லை.
மேலும் பாய்ஸ் படம் பெரிய அளவில் போகாததாலும், விமர்சனங்களை சந்தித்ததாலும், தொடர்ந்து நடித்த சென்னைக் காதல், சச்சின் ஆகிய இரு படங்களும் பெரும் தோல்விப் படங்களாக மாறியதாலும் ராசியில்லாத நடிகையாக மாறிப் போனார் ஜெனீலியா.
இதனால் தெலுங்கில் கவனம் செலுத்தினார் ஜெனீலியா. அங்கு எதிர்பாராதவிதமாக நல்ல வரவேற்பு கிடைக்கவே அப்படியே செட்டிலாகி விட்டார்.
ஆனால் அங்கும் ஜெனீலியாவுக்கு திரிஷாக்கள், இலியானாக்கள் ரூபத்தில் மிரட்டல் வந்தது. இலியானா, திரிஷாவுக்குப் போக மீதமிருந்த படங்கள்தான் ஜெனீலியாவுக்கு வந்து சேர்ந்தன.
இருந்தாலும் இலியானா, திரிஷா ஆகிய மலைகளுக்கு மத்தியில் மடுவாக இருந்தாலும், மெதுவாக முன்னேறி வந்தார் ஜெனீலியா. இந்த நிலையில் இனியும் போட்டியில் நிலைக்க முடியாத என்ற மன நிலைக்கு வந்து விட்டார் ஜெனீலியா. இதனால் மீண்டும் தமிழுக்கேத் திரும்பத் தீர்மானித்துள்ளாராம்.
சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல், நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடிக்கப் போகிறாராம். கிளாமருக்கும் பச்சைக் கொடி காட்டப் போகிறாராம்.
தெலுங்கில் இப்போதைக்கு நம்பர் ஒன் நடிகை இலியானாதானாம். கோடி சம்பளம் வாங்குகிறாராம் இந்த 'கேடி' நாயகி. இத்தனை சம்பளம் கேட்டும் கூட சற்றும் தயங்காமல் கால்ஷீட் கேட்டு காத்திருக்கிறாரார்களாம் தயாரிப்பாளர்கள்.
இதனால் இனியும் அங்கு காலத்தைக் கழிக்க முடியாது என்பதால்தான் தமிழுக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளாராம் ஜெனீலியா.
ஜெனீலியாவின் வரவு நல்வரவாகுக!


Click it and Unblock the Notifications











