Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஹாப்பி பர்த்டே 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்!
ரஜினி 2002ல் பாபா படத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியாலும், தனது உடல்நிலையை கருதியும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த காலகட்டம். சுமார் 3 ஆண்டுகள் இனி ரஜினி நடிப்பாரா..? என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள், சினிமாக்காரர்கள் அனைவருமே ஏங்கிக் கொண்டிருந்தனர்.
2004 இறுதிவாக்கில் ரஜினிக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்தது. மலையாளத்தில் வெளிவந்து ஹிட் அடித்த மணிச்சித்திரத்தாழ் படத்தை ரீமேக் பண்ண முடிவானது. படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அப்போது தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு பீக்கில் இருந்தவர்கள் ஜோதிகா, சிம்ரன்தான். சிம்ரனுக்கு திருமணம் ஆகி விட்டதால்தான் அவர் நடிக்க முடியாமல் போய் ஜோதிகாவுக்கு அந்த வாய்ப்பு போனது. ஹிந்தியில் இருந்து ஒரு ஹீரோயின்தான் ரஜினிக்கு ஜோடி என எல்லோரும் எதிர்பார்த்திருக்க, ரஜினியும் பி.வாசுவும் டிக் அடித்தது நயன்தாராவை. சினிமாக்காரர்களாலேயே இந்த செய்தியை நம்ப முடியவில்லை. நயன் அப்போது சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஆரம்பித்த நயன்தாராவின் சுக்கிர திசை இன்று வரை பீக்கில்தான் இருக்கிறது.
இன்றைய தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் யாராக இருந்தாலும் அவருடன் அட்லீஸ்ட் ஒரு படமாவது நடித்திருப்பார் நயன்தாரா. நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. 32 வயதையும் தொடப்போகிறார். ஆனால் இன்றைய இளம் ஹீரோக்களை உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார்? யாருடன் ஜோடி சேர ஆசை? என கேளுங்கள். நயன் பெயர்தான் வரும். சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் இதைக் குறிப்பிட்டார். விஜய்சேதுபதி ஒருபடி மேலே போய் ஒரு விருது நிகழ்ச்சியில் நயனை கடத்த ஆசை எனச் சொன்னார். இருவருடனுமே ஜோடி சேர்ந்துவிட்டார் நயன்தாரா.
ரஜினி படம் புக் ஆனபோது நயன் இருந்த வீடு எத்தனை சிறியது? என்பதை மூத்த பத்திரிகையாளர்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். ஆனால் இன்று நயனின் சம்பளம் மூன்று கோடியைத் தாண்டி நிற்கிறது.
தமிழ் சினிமாவில் பானுமதி, பத்மினி, சாவித்திரி, ஸ்ரீதேவி முதற்கொண்டு குஷ்பு, சிம்ரன், ஜோதிகா வரை கோலோச்சியவர்கள் அதிகம். ஆனாலும் நயனுக்கான கிரேஸ் எல்லோரையுமே பின்னோக்கி தள்ளி இளம் ஹீரோக்களை கூட நயன் பக்கம் ஈர்க்கிறது. காரணம் சுண்டி இழுக்கும் அவரது அழகு மட்டுமல்ல, தனக்கென ஒரு குறிப்பிட்ட ரசிக வட்டத்தை தமிழகத்தில் வைத்திருப்பது தான்.
டாப் ஹீரோக்கள் தங்களது மார்க்கெட் வேல்யூவை குறையாமல் பார்த்துக்கொள்ளவும், இளம் ஹீரோக்கள் டாப் லெவலுக்கு போகவும் நயன்தாராவுடன் இணைய ஆசைப்படுகிறார்கள். அதற்காக தங்களது சம்பளத்தைக் கூடக் குறைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இன்றைய நிலையில் படத்தில் நயன் இருப்பது என்பது ஒரு தனி ஹீரோவுக்கான மார்க்கெட் வேல்யூவாகவே பார்க்கப்படுகிறது.
நயனைச் சந்தித்த இயக்குநர் பாண்டிராஜ் 'பாலிவுட்டில் பிரிந்த காதலர்கள் சினிமாவில் இணைந்து நடிக்கும்போது நீங்கள் நடித்தால் என்ன?' என்று கேட்டிருக்கிறார். நயனும் வீம்புக்காக ஏன் ஒரு நல்ல ஸ்க்ரிப்டை விட வேண்டும்? என்று உடனே ஒப்புக்கொண்டு விட்டார். அதுதான் நயன். தன் மனதுக்கு எது சரியென படுகிறதோ அதை செய்வதற்கு ஒரு நொடி கூட தாமதிக்க மாட்டார்.
நயன் அளவுக்கு உயரத்துக்கு போன நடிகையோ, சம்பளம் வாங்கிய நடிகையோ தமிழில் இல்லை. அதேபோல் மீடியாக்களுக்கு தீனி போட்டவர்களும் இல்லை. அவரது ஒவ்வொரு காதல் பிரிவுகளும் அவருக்கு பக்குவத்தைத் தந்தது. தமிழ் குடும்பங்களிடம் அய்யோ பாவம் இந்த பொண்ணு என்று பேச வைத்தது. இதுவரை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் இது போன்று நெகட்டிவ் நியூஸ் அனுதாபமாவது நடக்கும். நயன் விஷயத்தில் அப்படி நடந்தது ஆச்சர்யம்தான்.
நயன்தாரா மற்ற நடிகைகள் போல கிளாமர் தனி, நடிப்பு தனி என்று பிரிக்காமல் இரண்டு ஏரியாவிலும் கலந்துகட்டி அடிக்கிறார். பில்லா போன்ற படங்களில் கிளாமர் குயினாகவும் வலம் வந்தார். ராஜாராணி போன்ற படங்களில் பெர்ஃபார்மன்ஸிலும் பின்னி எடுத்தார்.அதேபோன்று தனக்கென எந்த வரைமுறையையும் வைத்துக்கொண்டு படங்களை மறுத்ததில்லை. ரஜினிக்கு ஜோடியாக நடித்த பின்பு கூட எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவோ, சிவகாசியில் ஒரு பாட்டுக்கு ஆடவோ மறுக்கவில்லை. அதுதான் முன்னணி ஹீரோக்களுக்கு நயனை பிடிக்க முக்கிய காரணம்.
ஏன் எல்லா ஹீரோக்களுக்கும் நயனைப் பிடிக்கிறது?
'ஸோ சிம்பிள் தாங்க. நயனை பொறுத்தவரைக்கும் டாப் ஹீரோ, யங் ஹீரோ, புது ஹீரோனுலாம் பிரிச்சு பார்க்க மாட்டாங்க. அதேமாதிரி சொந்த வாழ்க்கையில எவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் அது ஸ்க்ரீன்ல பிரதிபலிக்காத அளவுக்கு கேமராவுக்கு முன்னாடி நின்னா மாறிடுவாங்க. ஹீரோக்களுக்கு பிடிக்குதுகறதை விட ஆடியன்ஸுக்கு பிடிக்குது. அதனால அவங்களை கூடுதல் பலமா நினைக்கிறோம்' இது நயனுடன் இரண்டு படங்கள் இணைந்து நடித்த ஹீரோ ஒருவரின் கருத்து.
நயன் மீது சொல்லப்படும் பெரிய குற்றச்சாட்டு ஆடியோ ரிலீஸ், புரமோஷன்களுக்கு வருவதில்லை என்பதுதான். ஆனால் அந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டுதான் அவரை படங்களில் ஒப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.
நயனுடன் நடிக்க வந்த நடிகைகள் எல்லாம் வாய்ப்புகள் ஓய்ந்து போய் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக தொழிலதிபர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நயனோ ரஜினி, சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு என பிஸியாக தமிழ் சினிமாவின் முடிசூடா மகாராணியாகவே வலம் வருகிறார். ஹீரோயின்களுக்கு விருதுகள் முக்கியமல்ல, ரசிகர்கள் மனதில் குடிபுகுந்தாலே போது. அந்த விஷயத்தில் நயன் தேசிய விருதே வாங்கிவிட்டார் எனலாம்.
-க.ராஜிவ் காந்தி