நடிப்பு ஆசையை வெளியில் சொல்ல முடியாமல் எட்டு ஆண்டுகள் தவித்த ஜோதிகா!
திருமணத்துக்குப் பிறகு தனக்கு நடிக்கும் ஆசை இருந்தாலும் அதனை வெளியில் சொல்லாமல் எட்டு ஆண்டுகள் தவித்தாராம் ஜோதிகா.
இதனை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவே நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே' படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜோதிகா, சூர்யா, இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு உதவி
இந்த நிகழ்ச்சியில், அகரம் பவுண்டேசன் சார்பாக திருமணமாகி வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் 25 பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு தேவையான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இது முதற்கட்டமாக இந்த விழாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். தற்போது அகரம் பவுண்டேசனுடன், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது.

நல்ல கதை அமைந்தால்...
இதையடுத்து, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சூர்யாவும், ஜோதிகாவும் பதிலளித்தனர். அப்போது ஜோதிகா பேசும்போது, தற்போது எனது கணவர் தயாரிப்பில் நடித்துள்ளேன். இது தவிர நல்ல கதை அமைந்தால் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடிக்க தயாராக உள்ளேன் என்றார்.

மனைவியின் ஆசையை...
சூர்யா பேசும்போது, ‘36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கும் ரகுமான் கதாபாத்திரம் போல் நிஜவாழ்க்கையில் கணவர்கள் வாழக்கூடாது. தனது மனைவியின் ஆசைகளை கணவர் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். அவர்களின் ஆசையை நிறைவேற்ற கணவர்கள் முன்வர வேண்டும்.

எட்டு ஆண்டுகள் தவிப்பு
திருமணமாக கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகுதான் ஜோதிகா நடித்திருக்கிறார். ஆரம்பத்திலேயே நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்குள்ளும் இருந்துள்ளது. ஆனால், அதை வெளிப்படையாக என்னிடம் கூற முடியாமல் தவித்திருக்கிறார்.

கணவர்களின் கடமை
ஒருகட்டத்தில் அவருடைய ஆசையைத் தெரிந்துகொண்ட நான் அவரை வைத்து படம் எடுக்க முன்வந்தேன். இதேபோல், ஒவ்வொரு கணவர்மார்களும் தனது மனைவியின் ஆசைகளை தெரிந்துகொண்டு, அதை நிறைவேற்ற முன்வரவேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











